Skip to main content

நாகையில் நடந்த பயங்கர சேஸிங்.. பறந்த கார்கள்! காவல்துறை செய்த தரமான சம்பவம்

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Police arrested karur theft group in nagai

கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவத்தை நிகழ்த்திய மர்ம நபர்கள், போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அங்கிருந்து நாகை மாவட்டத்திற்கு தப்பிச்சென்றனர். இதனை கண்டுபிடித்த கரூர் போலீசார், நாகை மாவட்ட போலீஸாரை அலர்ட் செய்தனர். இதனைத் தொடர்ந்து  கொள்ளையர்களை பிடிக்க  வேளாங்கண்ணி, நாகை, நாகூர், வாஞ்சூர், கானூர் உள்ளிட்ட சோதனை சாவடிகளில் தனிப்படை , தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது நாகூர் முட்டம் அருகே வேகமாக வந்த வாகனத்தை தடுத்து நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் வாகனத்தில் வந்தவர்கள் வேகத்தை அதிகப்படுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து ஹைவே ரோந்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து ஹைவே பேட்ரோல் போலீசார், நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், தனிப்படை போலீசார், அதிவிரைவு படை போலீஸார் என காவலர்கள் வாகனங்களில் விரட்டிச் சென்றனர். போலீசார் விரட்டி வருவதை அறிந்த கொள்ளையர்கள் சினிமா படத்தை மிஞ்சும் அளவிற்கு வாகனத்தில் மின்னல் வேகத்தில் பறந்தனர். இதற்கெல்லாம் சளைக்காத போலீசார், கொள்ளையர்கள் சென்ற வாகனத்தை விரட்டி சென்று நாகை மாவட்டத்தின் எல்லையான கானூர் சோதனை சாவடி அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் தப்பிச்செல்ல முயன்ற மதுரையைச் சேர்ந்த கண்ணன், பகுருதீன், பாண்டியன் தஞ்சையை சேர்ந்த ராஜேஷ், சிவகங்கையை சேர்ந்த அஸ்வின் ஆகிய பிரபல கொள்ளையர்கள் ஐந்து பேரை அதிரடியாக கைது செய்தனர். 

Police arrested karur theft group in nagai

பின்னர் வாகனத்தை சோதனையிட்டதில் அதில் கொள்ளையடிக்க பயன்படுத்தப்படும் இரும்பு ராடு, பட்டாகத்தி, வீச்சரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து வாகனத்தையும், கொள்ளை மற்றும் கொலைக்கு பயன்படுத்தும் பயங்கர ஆயுதங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Police arrested karur theft group in nagai

கரூரில் கைவரிசை காட்டிவிட்டு நாகைக்கு தப்பி வந்த பலே கொள்ளையர்களை வாகனத்தில் விரட்டி சென்று மடக்கிபிடித்த எஸ்.பி உள்ளிட்ட தனிப்படை போலீசாருக்கு, பொதுமக்களிடமிருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. மேலும் சினிமா பட பாணியில் நடந்த இந்த பரபரப்பான சேசிங் காட்சிகள் நாகையில் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்