Skip to main content

ஜாதி, மதம் குறிப்பிடாத சமத்துவ சான்றிதழ் - சாதித்த பினராய் விஜயன்

Published on 31/03/2018 | Edited on 31/03/2018
kerala

 

தமிழகத்தில். ஜாதி மத பேதமில்லாமல் அனைவரும் ஆலயங்களில் அர்ச்சகராகலாம் என ஏட்டளவில் இருந்துவந்ததை நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார் கேரளாவின் முதல்வர் பினராய் விஜயன். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கேரள ஆலயங்களில் ஜாதி மதம் குலம், கோத்திரம் அனுஷ்டிக்காமல் மண்ணில் அவதரித்த மனிதர்கள் அனைவரும் ஒரே ஜாதியினர் என்கிற  சமத்துவத்தை உணர்த்துகிற வகையில் அனைத்து சமூகம் சார்ந்தவர்களையும் அர்ச்சகராக நியமித்தார் முதலவர் பினராய் விஜயன்.

 

அந்த வாய்ப்பின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் கூட கொல்லம்,கோட்டயம் பகுதி ஆலயங்களில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டு இறைவழிபாட்டினை மேற்கொண்டு வருகிறார்கள்.

 

அதையடுத்து தற்போதைய பட்ஜெட்டில் ஒதுக்கீட்டின் படி கேரளாவிலுள்ள 147 சட்டமன்றங்களில் அடங்கியிருக்கிற அனைத்து மேல்நிலைப்பள்ளிகளுக்கும் தலா  மூன்று கோடிகளை ஒதுக்கிய  முதல்வர் பினராய் விஜயன், அதன்மூலம் அரசுப் பள்ளிகளின் தரங்களை உயர்த்தியதோடு தற்போதைய முன்னேறிய தொழில் நுட்ப வசதிகளை அமைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மாநிலத்திலுள்ள அனைத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கைத்தறித் துணிகளாலான சீருடையை இலவசமாக வழங்கியதின் மூலம்,நசிந்து கொண்டிருந்த கைத்தறி நெசவுத் தொழிலுக்கு உயிரூட்டியிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.

 

கேரளாவிலுள்ள அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயில்கின்ற ஒரு லட்சம் மாணவர்கள், ஜாதி, மதம் குறிப்பிடாத சான்றிதழ்களுடன் பயின்று வருகின்றார்கள் என கடந்த 28ந் தேதி சட்டமன்றத்தில் உறுப்பினர் ஒருவரின்  கேள்வியில்லா நேரத்தின் போது பதிலளித்தார் கல்வி அமைச்சரான சி. ரவீந்திரன்.

 

கேரள மாநிலக் கல்வித்துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் முதல்வர் பினராய் விஜயன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம்; முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
The Kerala Story film issue Chief Minister Pinarayi Vijayan strongly condemned

விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் அதா சர்மா, சித்தி இட்னானி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு மே 5 ஆம் தேதி வெளியான இந்தி படம் தி கேரளா ஸ்டோரி. இப்படத்தின் டீசர் வெளியானது முதலே மத வெறுப்பைத் தூண்டும் வகையில் இப்படம் இருப்பதாக சர்ச்சையானது. தமிழகத்தில் இந்த படத்திற்கு தொடர் எதிர்ப்பு அதிகரிக்க, மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் தானாக முன்வந்து தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடமாட்டோம் என அறிவித்தன.

அதே சமயம் மேற்கு வங்கத்திலும் இப்படத்திற்குத் தடை விதித்து அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் போலீஸ் பாதுகாப்புடன் தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கத்தில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனமே பெற்றாலும் உலகம் முழுவதும் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தூர்தர்ஷனில் இன்று (05.04.2024) இரவு 8 மணிக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை ஒளிபரப்புவதற்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பினராயி விஜயன் தெரிவிக்கையில் “அரசு தொலைக்காட்சிகள் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் கூட்டணியின் பிரச்சார இயந்திரமாக  ஒரு போதும் மாறக்கூடாது. வெறுப்பை விதைக்கும் இத்தகைய தீங்கிழைக்கும் முயற்சிகளை கேரளா ஒருபோதும் அனுமதிக்காது” எனத் தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி ஒளிப்பரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸுக்கு ஒரு பாடம்” - பினராயி விஜயன்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
Pinarayi Vijayan says Kejriwal's arrest, a lesson for Congress

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. இதையடுத்து, டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியாவுக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 21 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில், கடந்த ஆண்டு பிப்ரவரி 26 ஆம் தேதி மணீஷ் சிசோடியாவை சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறையும் மணீஷ் சிசோடியாவை கைது செய்தது. இதையடுத்து மணீஷ் சிசோடியா தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். அதே சமயம், மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி விவகாரத்தில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங்கின் டெல்லி வீட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து சஞ்சய் சிங், அமலாக்கத்துறையால் கைது (04.10.2023) செய்யப்பட்டு டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மேலும் இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது. 

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து அரவிந்த கெஜ்ரிவாலிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில், டெல்லி ராம்லீலா மைதானத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த சோரன் ஆகியோரின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இந்தியா கூட்டணியின் பேரணி நேற்று முன் தினம் (31-03-24) நடைபெற்றது. இதில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் நேற்று (01-04-24) கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்தியா கூட்டணியின் பேரணி, பா.ஜ.க அரசுக்கு வலுவான எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் முடிவில், இந்த பேரணி நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி இதில் இருந்து பாடம் கற்க வேண்டும். ஏனென்றால், காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சித் தலைவர்களுக்காக எதிராக பா.ஜ.க தாக்குதல் நடத்துகிறது. இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி அணுகுமுறை சரியில்லை. 

டெல்லி அரசால் நடந்ததாக கூறப்படும் மதுபான உரிம ஊழல் குறித்து போலீசில் முதல் முதலில் புகார் அளித்தது காங்கிரஸ் தான். டெல்லி அமைச்சர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்ட போது, கெஜ்ரிவாலை ஏன் கைது செய்யவில்லை என்று கேள்வி எழுப்பிய கட்சியும் காங்கிரஸ் தான். அவர் கைது செய்யப்படும் வரை காங்கிரஸ் இதை செய்து வந்தது. தற்போது தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் மாற்றியுள்ளது. கெஜ்ரிவாலின் கைது, காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெரிய வாழ்க்கை பாடம். முடிவுகளை எடுக்கும்போது நாட்டின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்க காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்.