
கரோனாவுக்குப் பலியான மருத்துவர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்ட வழக்கில் ஜாமீன்கோரி 10 பேர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணையை இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
இதனிடையே மருத்துவர் சைமன் ஹெர்குலஸ் உடலை அடக்கம் செய்யவிடாமல் தகராறு செய்த 12 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் நிபுணர் சைமன் உடலை ஏப்ரல் 20- ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மற்றும் வேலாங்காடு இடுகாடுகளில் அடக்கம் செய்யக்கூடாது என அப்பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தியதுடன், அவரின் உடலை எடுத்துச் சென்ற வாகனத்தைத் தாக்கியும், அரசு ஊழியர்களைத் தாக்கியும் தகராறு செய்தனர்.
இந்தநிலையில் டி.பி.சத்திரம் மற்றும் அண்ணா நகர் காவல் நிலையங்களில் ஒரு பெண், 17 வயது சிறுவன் உள்ளிட்ட 23 பேர் மீது வழக்குப் பதியப்பட்டு, பலர் கைது செய்யப்பட்டனர். அண்ணா நகர் காவல் நிலைய வழக்கில் கைதான இளங்கோ, லோகேஷ்வரன், செந்தில்குமார், அண்ணாமலை, ஆனந்த், சோமசுந்தரம், குமார், மணிகன்டன், காதர் மொய்தீன் மற்றும் நிர்மலா ஆகிய 10 பேரின் ஜாமீன் மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு நீதிபதி ஆர்.சுப்ரமணியன் முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளதால், இந்த ஜாமீன் மனுக்களையும் அந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்க பரிந்துரைக்கும்படி காவல்துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, 10 பேரின் ஜாமீன் மனுக்களை இரு நீதிபதிகள் அமர்வுக்கு பரிந்துரை செய்துள்ளார். இதற்கிடையில், அண்ணா நகர் காவல் நிலைய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள சோமசுந்தரம், சுரேஷ், விக்னேஷ் குமார், குமார் என்கிற பிச்சை, விஜய், மணி ஆகியோரும், டி.பி.சத்திரம் காவல் நிலைய வழக்கில் கைதாகி சிறையில் உள்ள குமரேசன், மோகன், ஜெயமணி, ஜெயபிரபா, ஜெனிதா, தமிழ்வேந்தன் ஆகியோர் என 12 பேர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.