
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில், வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக எடுத்து வந்து கொடுப்பது வழக்கம். அந்த வகையில் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
அப்போது, திடீரென ஒருவர் தனது கையில் தேசியக் கொடியை ஏந்தி வந்து ‘வந்தே மாதரம்.. வந்தே மாதரம்...’ எனக் கூறினார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உங்களுடைய குறை என்ன வாங்க கலெக்டரிடம் கூறலாம் எனக் கூறியவுடன், இருங்க மனு எடுத்துட்டு வரேன் எனச் சொல்லி வேகமாகப் புறப்பட்டுச் சென்றார். ஆனால் சென்றவர் திரும்பி வரவேயில்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.