Skip to main content

தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகும் வெப்பம்; தவிக்கும் ஈரோட்டு மக்கள்

Published on 15/04/2023 | Edited on 15/04/2023

 

nn

 

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வரை ஈரோட்டில் பதிவாகி இருந்தது.

 

காலை 9 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை நீடித்து வருகிறது. குறிப்பாக மதியம் 11 மணி முதல் மூன்று மணி வரை வெயிலின் தாக்கம் உச்சத்தில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மதியம் நேரத்தில் பெரும்பாலும் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. வீடுகளிலும் மின்விசிறி இயங்கினாலும் புழுக்கம் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் குழந்தைகள் முதியவர்கள் படும் அவதி அடைந்து வருகின்றனர்.

 

வெயிலுடன் அனல் காற்றும் வீசி வருவதால் மக்கள் திணறி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் நீர்நிலைகளை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர். கோபிசெட்டிபாளையம் அடுத்த கொடிவேரி அணை சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளது. நேற்று தமிழ் புத்தாண்டு விடுமுறை மற்றும் நாளை, நாளை மறுநாள் தொடர் விடுமுறை காரணமாக முதலே கொடிவேரி அணையில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடும்பமாக மக்கள் சென்று குளித்து வருகின்றனர்.

 

இதேபோல் காலிங்கராயன் வாய்க்கால் கீழ்பவானி வாய்க்கால் பகுதிகளிலும் மக்கள் கூட்டம் இன்று அதிகமாகவே இருந்தது. மேலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க மக்கள் அதிக அளவில் குளிர்பானங்களை பருகத் தொடங்கியுள்ளனர். கரும்பு பால், மோர், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதேபோல் தர்பூசணி, வெள்ளரிக்காய் வியாபாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஈரோட்டில் கடந்த இரண்டு நாட்களாகத் தொடர்ந்து 104 டிகிரி வெயில் பதிவாகி வந்தது. நேற்று 103 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

 

தமிழ்நாட்டில் 2 -வது இடத்தில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் ஈரோட்டில் பதிவாகி இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க குடையை எடுத்துச் செல்கின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் முகத்தைத் துணியால் மறைத்துச் செல்கின்றனர். இப்போதே வெயிலின் தாக்கம் கொடுமையாக இருக்கும் போது அடுத்த மாதம் தொடக்கத்திலிருந்து இறுதிவரை அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் வரவுள்ளது அப்போது வெயிலின் தாக்கம் இதைவிடக் கொடுமையாக இருக்கும் என ஈரோடு மக்கள் இப்போதே அச்சப்பட தொடங்கியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்