மக்களின் தொடர் போராட்டத்தால், சத்தியமங்கலத்தில் புதிதாக திறக்க இருந்த டாஸ்மாக் கடை திறக்கப்படாமல் மூடப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகர்ப்பகுதியில் சத்தியமங்கலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே புதியதாக டாஸ்மாக் கடை திறப்பதற்காக கடந்த சில நாட்களாக பணிகள் நடைபெற்று வந்தது. இதை அறிந்த அந்தப்பகுதி பொதுமக்கள் சென்ற சனிக்கிழமை கடை அமைக்கப்பட்ட இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை மீண்டும் இங்கு டாஸ்மாக் மதுபானக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பலர் சத்தியமங்கலம்,கோவை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் வாகனங்களை வேறு பாதையில் திருப்பி விடப்பட்டனர்.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே ஒன்று கூடி வாகனங்கள் வேறு பாதையில் செல்லாத வண்ணம் மறியல் போராட்டம் நடத்தினர். இந்த தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் உயர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசி இப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட மாட்டாது என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.