Skip to main content

கிச்சன் கட்ட ரூ.90 ஆயிரம் லஞ்சம்! சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர் - வைரலாகும் ஆடியோ

Published on 16/05/2024 | Edited on 16/05/2024
 panchayat  president asked for a bribe of 90 thousand rupees to build a kitchen

செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அருகே அமைந்துள்ளது அகரம்தென் ஊராட்சி. இப்பகுதியில் உள்ளது  மும்மூர்த்தி அவென்யூ. இங்கு, கொத்தனார் பாபு அருள்ஜோதி என்பவருக்கு சொந்தமாக 1100 சதுர அடி கொண்ட நிலம் உள்ளது. இதனை, இந்து முன்னணியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி சந்தானம் என்பவரிடம் பாபு அருள்ஜோதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாபு அருள்ஜோதி தனது சொந்த நிலத்தில் வீடு கட்ட முடிவு எடுத்துள்ளார். இதையடுத்து,  3 அடுக்கு மாடிவீடு கட்ட சி.எம்.டி.ஏ.விடம் முறைப்படி அனுமதி பெற்றுள்ளார். தொடர்ந்து, நிலம் அமைந்துள்ள பகுதியானது, அகரம்தென் ஊராட்சிகுட்பட்டது என்பதால்.. அனுமதி வாங்க அகரம்தென் ஊராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்றுள்ளார். அங்கு, அகரம்தென் ஊராட்சி செயலாளர் பிரபாகரன் என்பவரைச் சந்தித்து, கட்டட அனுமதி கோரி மனு அளித்துள்ளார். அப்போது, ஊராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரியும் ஹரிகிருஷ்ணன் என்பவர், கட்டட அனுமதி வாங்கவந்த பாபு அருள்ஜோதியை வழிமறித்துள்ளார். அப்போது பேசியவர், ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனை பார்த்து விட்டீர்களா, ஒரு கிச்சனுக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் 3 அடுக்கு மாடி கிச்சனுக்கு 90 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாபு அருள்ஜோதி முடியாது எனக் கூற, நீங்கள் எதுவென்றாலும் தலைவரிடம் பேசுங்கள் எனக் கூறி அவரை அனுப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, வீடு திரும்பிய பாபு அருள்ஜோதி, அகரம்தென் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனை செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, பேசிய திமுகவைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன், ''வீடுகட்ட உள்ள இடம் சந்தானம் வீட்டிற்கு எதிரில் உள்ள இடம் தானே.. அனுமதி கொடுக்க ரொம்ப யோசிக்கணுமே..'' எனக் கூறியுள்ளார். இறுதியாக பேசியவர், ''உன் சொந்த வீட்டின் ஆவணங்களை எடுத்துக் கொண்டு நேரில் வா..'' என்று அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், ஆவணங்களை வாங்கிக் கொண்டு ஊராட்சி தலைவர் மிரட்டுவார் என எண்ணிய பாபு அருள்ஜோதி, ஊராட்சி தலைவரிடம் பேசிய ஆடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து, கட்டட அனுமதி கோரினால் ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரன் 90 ஆயிரம் லஞ்சம் கேட்பதாக பதிவிட்டார். அதில், தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்தின் எக்ஸ் தள பக்கத்தை டேக் செய்து இருந்தார். இதையடுத்து, கட்டடம் கட்ட லஞ்சம் கேட்டதாக கூறப்படும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் லஞ்சம் கேட்டதாக கூறிய குற்றச்சாட்டு குறித்து சி.எஸ்.ஆர்.பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், ஒரு வாரம் ஆகியும் போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், கட்டடம் வழங்க அனுமதியும் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக நில உரிமையாளர் பாபு அருள்ஜோதி குற்றம்சாட்டி வருகிறார். இதனிடையே, மீண்டும் பாபு அருள்ஜோதி ஊராட்சி தலைவர் ஜெகதீஸ்வரனிடம் போனில் பேசியதாகவும், அப்போது அவர் ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக புகார் ஒன்றையும் போலீசாரிடம் அளித்ததுள்ளார். இதையடுத்து, தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று செய்தியாளர்களைச் சந்தித்து நடந்ததை கொத்தனார் பாபு அருள்ஜோதியும், அந்த இடத்தின் முந்தைய உரிமையாளர் சந்தானமும் விரிவாக பேசினர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

சார் பதிவாளர் வீட்டில் புதைக்கப்பட்ட பணம்; லட்சக்கணக்கில் தோண்டி எடுத்த லஞ்ச ஒழிப்புத்துறை

Published on 21/06/2024 | Edited on 21/06/2024
13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று இரவு வேலூர் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். இரவு 7.30 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை நடைபெற்ற திடீர் சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தத் திடீர் சோதனையின் போது வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் ஒருவர் உள்ளே பணத்தோடு இருந்ததும் அந்தப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் காட்பாடி சார் பதிவாளர் (பொறுப்பு) நித்தியானந்தத்துக்கு சொந்தமான திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தில் உள்ள வீட்டில் காலை முதல் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை மேற்கொண்ட நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாத 13 லட்சத்து 97 ஆயிரம் ரொக்கப்பணம், 80 சவரன் தங்க நகைகள் தொடர்பான ஆவணங்கள், வங்கி கணக்குகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். இதில் 12 லட்சம் ரூபாய் ஒரு பிளாஸ்டிக் கவரில் சுற்றி வீட்டுக்கு பின்புறம் மண்ணில் புதைக்கப்பட்டு இருந்து தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேலூரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

13 lakhs in cash, documents were seized from house of subRegistrar

மேலும் காட்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில், காட்பாடி வட்டத்துக்கு உட்பட்ட சுமார் 200 ஏக்கர் அரசு நிலத்தை பத்திர பதிவு செய்ய முயன்றதாக 262 முறையற்ற பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story

வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனை; லஞ்சம் வாங்கிய தாசில்தார் கைது

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார். தன்னுடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் சொத்து மதிப்பு சான்று பெற்று அரசு ஒப்பந்த டெண்டர்களை எடுத்து செய்து வருகிறார்.

இவர் சொத்து மதிப்பு சான்று பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய 7900 ரூபாய் வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் மற்றும் ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியரின் பரிந்துரை பெற்று கடந்த 13.6.2024 ஆம் தேதி ஆரணி வட்டாட்சியர் மஞ்சுளா அணுகி தந்துள்ளார்.

அவர் ரூ.20 லட்சம் சொத்து மதிப்பீடு சான்று பெற இரண்டு சதவிதம் ரூ,20,000 லஞ்சமாக கேட்டு உள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Tahsildar arrested for taking bribe

திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி திருவேல் முருகன் தலைமையில் காவல் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் 14ஆம் தேதி மாலை ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்க சொல்ல ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜிலன்ஸ் டிஎஸ்பி திருவேல் முருகன் மற்றும் காவல் ஆய்வாளர் மைதிலி கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்து தாசில்தாரும், இரவு காவலரும் கைது செய்யப்பட்டனர்.