சேலம் அழகாபுரம் குட்டைத் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (26). பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. இவர், அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தார். அப்போது கீழ் வீட்டின் கழிவறையில் அலைப்பேசியை ஒளித்து வைத்து அதன் கேமராவை ஆன் செய்து வைத்திருந்தார்.
இந்நிலையில், அந்த வீட்டில் உள்ள சிறுமி ஒருவர், கழிப்பறைக்குச் சென்றுள்ளார். அங்கு அலைப்பேசி கேமரா ஆன் செய்யப்பட்டு இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டுள்ளார். இதையறிந்த பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி மணிகண்டன், உடனடியாக அலைப்பேசியை எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து அந்த சிறுமியின் பெற்றோர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்திய போலீசார், அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.