பாராளுமன்றத்தில் அதிமுக மக்களவை குழுத் தலைவரான எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் குமார் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மானிய கோரிக்கையின் விவாதத்தில் பங்கேற்று
கொண்டார்.

அப்பொழுது பாராளுமன்ற உறுப்பினரான ஓ.பி.ரவீந்திரநாத் குமார் பேசும் போது.... ’’நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ள சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியை பாராட்டுகிறேன். இதன் பயனாக 2014- 2015ல் ஒரு நாளைக்கு 12 கிலோ மீட்டர்சாலை போடும் பணி 2018-2019 ல் 30 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடி அரசு இந்தியாவின் சாலை கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு முன்னோடி திட்டங்களை அறிவித்து வருகிறது. மத்திய அரசு கடந்த ஐந்து ஆண்டுகளில் சாலைகட்டமைப்புகளை மேம்படுத்துவதில் சாதனை புரிந்து இருப்பதை கோடிட்டு காட்டுகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சாலை திட்டங்களை செயல் படுத்துவதில் ஏற்படும் இடையூறுகளை சமாளிக்க தமிழக அரசு நிச்சியமாக ஆதரவு அளிக்கும் என்று உறுதி யளிக்கிறேன்.
மாநில சாலைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய சாலை நிதியிலிருந்து 10சதவீத நிதி ஒதுக்கீடு செய்யும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகத்தை பாராட்டுகிறேன்.
586.70 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் மற்றும் பாலங்களை 2019-2020 ஆண்டில் அமைப்பதற்கான 3500கோடி மதிப்பீட்டிலான முன் மொழிவு ஒன்றை தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு அனுப்பி இருக்கிறது. ஆகவே கள்ளகுறிச்சி - திருவண்ணாமலை சாலை, பழனி -தாராபுரம் சாலை, ஆற்காடு -திண்டிவனம் சாலை, வேலூர் - திருச்செந்தூர் சாலை ஆகிய நான்கு மாநில நெடுஞ்சாலைகளை தேசிய நெடுஞ்சாலைகளாக விரிவுபடுத்தும் அரசு திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதுபோல் என்னுடைய தேனி பாராளுமன்ற மன்ற தொகுதியில் தேனி, போடி, உசிலம்பட்டி, செக்கூரணி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை 49ல் உள்ள நான்கு இடங்களிலும் லெவல் கிராசிங் அமைக்க வேண்டும்’’ என்று கூறினார்.