Skip to main content

வடகிழக்கு பருவமழை... கால்நடைகளை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!

Published on 04/10/2021 | Edited on 04/10/2021

 

Northeast monsoon ...  Government of Tamil Nadu has issued precautionary measures to protect livestock!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், கால்நடைகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.

 

கட்டுப்பாட்டு அறை:

வெள்ளம் தொடர்பான நடவடிக்கைகளை முறையாகக் கண்காணிக்க தற்காலிகமாக கட்டுப்பாட்டு அறை மாவட்ட நிலையில் ஏற்படுத்தப்படுகிறது.

 

பொதுமக்கள் எளிதாக அணுக 1800-425-5880 என்ற இலவச தொலைபேசி எண் ஒதுக்கப்பட்டுள்ளது. 

 

நடமாடும் கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி அழைப்பு மையத்தின் இலவச எண் 1962 ஆகும்.

 

அவசர கால நடவடிக்கை குழு:

மாவட்ட அளவில் 1,294 அவசர கால நடவடிக்கை குழுக்கள் (Emergency Response Team - 'ERT') ஏற்படுத்தப்படுகிறது. 

 

விலங்குகள் காப்பகம்:

1,740 கால்நடை மீட்பு மையங்கள் / தங்குமிடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடிய இடங்களில் நிறுவப்பட உள்ளன. 

 

அடையாளம் காணப்பட்ட இடங்களில், மீட்கப்பட்ட கால்நடை / கோழிகளின் போக்குவரத்திற்கும், தீவனம், தீவனப்பயிர் மற்றும் குடிநீரை எளிதாக திரட்டவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

 

பாதிக்கப்பட்ட விலங்குகள் இந்நோக்கத்திற்காக அடையாளம் காணப்பட்ட மீட்பு மையங்கள் / முகாம்களுக்கு விரைவாகக் கொண்டு செல்லப்படும். 

 

அரசு சாரா அமைப்புகளால் நடத்தப்படும் கோஷாலாக்கள் மற்றும் எந்தவொரு அவசர கால தேவைகளையும் சமாளிக்கவும், கால்நடை நிலையங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சையளிக்கவும் கால்நடை பராமரிப்புத் துறையில் போதுமான கால்நடை மருந்துகள் இருப்பில் உள்ளன. 

 

56 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகள் வெள்ளத்தின்போது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும். 

 

தீவனம் கிடைப்பதை உறுதி செய்தல்:

கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையத்தில் (CBFD) தொகுதி வாரியாக தீவனம் கிடைப்பது (பச்சை மற்றும் உலர்) மற்றும் பற்றாக்குறை நிலை பற்றிய தரவுத் தளம் பராமரிக்கப்படுகிறது. 

 

தொடர்ந்து தீவனம் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பட்டியல், பரப்பு மற்றும் தீவன வகைகளுடன் (தொகுதி வாரியாக) பராமரிக்கப்படுகிறது. 

 

விவசாயிகள் மற்றும் அரசு பண்ணைகளில் கிடைக்கும் உபரி தீவனம் பற்றாக்குறை உள்ள இடங்களுக்கு கொண்டு செல்லப்படும். 

 

குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல்:

கால்நடை நிறுவனங்களில் கட்டப்பட்ட 1,215 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது.

 

சுகாதார பராமரிப்பை உறுதி செய்தல்: 

உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து கிருமி நீக்கம் செய்ய, பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் ப்ளீ ச்சிங் பவுடர் தெளித்தல், கழிவு நீர் சுத்திகரிப்பு, முறையான உரம் மற்றும் கழிவுகளை அகற்றுவதன் மூலம் நோய்கள், ஈக்கள் மற்றும் பூச்சிகள் பெருகுவதைத் தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 

 

கால்நடை சுகாதார முகாம்கள்:

கால்நடைகள் மற்றும் கோழிகளின் இயல்பான ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்காக 1,294 கால்நடை சுகாதார முகாம்கள் மேற்கொள்ளப்படும். 

 

அனைத்து களப்பணியாளர்களும் அதற்கேற்ப கவனமுடன் பணிபுரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

இவ்வாறு தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்