Skip to main content

நெல்லையில் பயங்கரம்; சாட்சியை மிரட்ட நடந்த கொலை; தொடர் போராட்டத்தில் உறவினர்கள்

Published on 15/11/2022 | Edited on 15/11/2022

 

Nellai seevalaperi issue one passed away 13 arrested

 

நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி கோனார் தெருவைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம் மகன் மாயாண்டி (வயது 38). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 10ம் தேதி இரவு சீவலப்பேரியில் இருந்து கலியாவூர் செல்லும் ரோட்டில் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். 

 

இந்தச் சம்பவம் குறித்து அறிந்த சீவலப்பேரி காவல்துறையினர் உடனடியாக அங்கே சென்று மாயாண்டியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதேபோல், இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

 

Nellai seevalaperi issue one passed away 13 arrested

 

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி சீவலப்பேரி சுடலை மாடசாமி கோவில் பூசாரி துரை என்கிற சிதம்பரம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாகவே தற்போது மாயாண்டி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்து பிரபாகரன், இசக்கி பாண்டி, முத்து ராஜ், கொக்கி குமார் உள்ளிட்ட 13 பேரைக் கைது செய்தனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சிலரைத் தேடிவருகின்றனர். 

 

போலீசார் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில், பூசாரி சிதம்பரம் கொலை வழக்கில் முதல் சாட்சியாக உள்ள நபரை இவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாகவும், அவரை மிரட்ட முயற்சித்ததாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், அந்த முதல் சாட்சி இவர்களிடம் சிக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில், பூசாரி சிதம்பரம் கொலையில் முதல் சாட்சியாக உள்ள மாயாண்டியை கொலை செய்துள்ளனர் என்று தெரியவந்துள்ளது. 

 

Nellai seevalaperi issue one passed away 13 arrested

 

இந்நிலையில், மாயாண்டியின் உடலை பிரேதப் பரிசோதனை முடிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க காவல்துறையினர் முயற்சித்தனர். ஆனால், அவரது உறவினர்கள் மாயாண்டியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் உள்ளவர்கள் கூறுகையில், பூசாரி கொலை வழக்கில் எந்த வகையிலும் சம்பந்தப்படாத மாயாண்டி தற்போது கொலை செய்யப்பட்டிருக்கிறார். எனவே, அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் கூறிவருகின்றனர். 

 

Nellai seevalaperi issue one passed away 13 arrested

 

இந்நிலையில், நேற்று காலை மாயாண்டியின் சமூகத்தைச் சேர்ந்த வள்ளிநாயகம் மற்றும் துரை ஆகியோர் தலைமையில் மாயாண்டியின் மனைவி உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நெல்லை ஆட்சியர் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்தித்துப் பேச வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால், அதிகாரிகள் அவர்களை ஆர்.டி.ஓ.வை சந்திக்க வைத்துள்ளனர். இதனால், அவர்கள் நெல்லை சந்திப்பு பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களில் 10 பேரை மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க ஏற்பாடு செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவை சந்திக்க வைத்தனர். 

 

Nellai seevalaperi issue one passed away 13 arrested

 

அப்போது மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, தற்போது மாநகராட்சியில் உள்ள தற்காலிகப் பணியிடத்தில் அவரின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பணி வழங்குகிறோம். அங்கன்வாடி பணிக்கு காலியிடம் வரும் போது அவர் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து கருணை அடிப்படையில் அவர் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவிட்டு இன்று தெரிவிப்பதாகக் கூறியிருந்தார். 

 

இந்நிலையில், இன்றும் நெல்லை மாவட்டம், சீவலப்பேரியில் பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்