Skip to main content

"நீட் அரக்கன், இளந்தளீர்களை காவு வாங்குகிறது... மனம் இறங்காத மத்திய அரசு"- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!

Published on 16/09/2021 | Edited on 17/09/2021

 

neet exam student incident minister duraimurugan meet student family

நீட் தேர்வு தொடர்ச்சியாக மாணவ, மாணவிகளைப் பலி வாங்கி வருகிறது. தகுதியற்ற இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பது கல்வியாளர்கள், சமூகநீதி கொள்கையுடையவர்களின் கருத்து. ஆனால் மத்திய அரசு இந்த விவகாரத்தில் பாராமுகம் காட்டி வருகிறது.

 

2021- ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 12- ஆம் தேதி இந்தியா முழுவதும் நடைபெற்றது. தமிழ்நாட்டில் 10,500- க்கும் அதிகமானவர்கள் தேர்வு எழுதினர். வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே தலையாரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு- ருக்மணி தம்பதியின் 17 வயது மகள் சௌந்தர்யாவும் நீட் தேர்வு எழுதினார்.

 

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் கடந்த செப்டம்பர் 13- ஆம் தேதி தனது வீட்டில் தனது தாயாரின் புடவையில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். இது தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடம் வேதனையை ஏற்படுத்தியது.

 

இந்நிலையில் தனது தொகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டார் என்கிற தகவலைக் கேள்விப்பட்ட தமிழ்நாடு  நீர்ப்பாசனம் மற்றும் கனிமம், சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன், இறந்த மாணவியின் இல்லத்திற்குச் செப்டம்பர் 16- ஆம் தேதி அன்று நேரடியாகச் சென்றார்.

 

neet exam student incident minister duraimurugan meet student family



தற்கொலை செய்து கொண்ட மாணவியின் தந்தை, தாய் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். அப்போது அந்த குடும்பத்தாரின் அழுகை அங்கிருந்த அனைவரின் கண்களில் இருந்தும் கண்ணீர் வரவைத்துவிட்டது. தி.மு.க.வின் பொதுச்செயலாளரான அமைச்சர் துரைமுருகனுடன், அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், வேலூர் மாவட்டச் செயலாளரும், அணைக்கட்டு எம்.எல்.ஏ.வுமான நந்தகுமார், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் போன்றோரும் சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறினர்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், "நீட் என்ற அரக்கனை மத்திய அரசு ஏவிவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 10- க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு எடுத்துள்ளது. இன்றைக்கு என்னுடைய தொகுதியில் இளம் தளிரைக் காவு எடுத்துள்ளது. அதனுடைய பசி என்றைக்குத் தீரும் என்று தெரியவில்லை. அது வெற்றி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று இல்லாவிட்டாலும் நாளை நீட் என்ற அரக்கனை தமிழ்நாடு அரசு அழிக்கும்.

 

இளம் தளிர்களுக்கு எனது வேண்டுகோள் மனம் தளர்ந்து விடக்கூடாது. ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் உலகம் மூழ்கிவிடாது. தேர்வும் உண்டு, உலகம் உண்டு என்பதை மாணவ செல்வங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். தயவு செய்து தவறான முடிவுகளை எடுக்காதீர்கள். நீட்டை எதிர்த்து நிற்போம். டெல்லியில் பஞ்சாப் விவசாயிகள் ஒரு வருடமாகப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் போராட்டத்தில் 100 விவசாயிகள் இறந்துள்ளார்கள். அவர்களுக்கு இறங்காத மத்திய அரசின் மனம், 10, 15 மாணவர்களுக்கு இறங்குமா எனத் தெரியவில்லை. ஆனால் இதற்கு நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முற்றுப்புள்ளி வைக்கும்" எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.

Next Story

“இனியும் கட்சியில் நீடிக்க முடியாது” - ஆம் ஆத்மி அமைச்சர் அதிரடி ராஜினாமா!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
 Aam Aadmi Party minister resigns and says Can't stay in the party anymore

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இது தொடர்பாக அவர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த 21 ஆம் தேதி (21.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாதென உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. மேலும் முன் ஜாமீன் வழங்கவும் டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்திருந்தது.

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு அன்றைய தினமே (21.03.2024) 12 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் வருகை தந்து, அவரிடம் விசாரணையும், அவரது வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர். அதன் பின்னர் அமலாக்கத்துறையால் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தன்னுடைய கைது நடவடிக்கையை சட்டவிரோத கைது என அறிவிக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், ‘முதலமைச்சர் என்பதற்காக எந்த ஒரு சிறப்புச் சலுகையும் காட்ட முடியாது. மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாக கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை குற்றம்சாட்டி உள்ளது. தற்போதைய நிலையில் விசாரணை நீதிமன்றத்தின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிட முடியாது. பொதுவாழ்வில் ஈடுபடும் நபர்கள் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும்’ என்று கூறி ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து நேற்று (09.04.2024) உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், டெல்லி ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை திடீர் ராஜினாமா செய்துள்ளார். மேலும், அவர் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இது குறித்து ராஜ்குமார் ஆனந்த் கூறுகையில், “ஊழலுக்கு எதிரான ஆம் ஆத்மியின் வலுவான செய்தியைப் பார்த்த பிறகு, நான் அதில் சேர்ந்தேன். ஆனால் இன்று, கட்சி ஊழல் நடவடிக்கைகளுக்கு மத்தியில் தன்னைக் கண்டறிந்துள்ளது. அதனால்தான் நான் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்.

ஆம் ஆத்மி ஊழலில் ஆழமாக உள்ளது. மேலும் ஊழல்வாதிகளுடன் என்னால் வேலை பார்க்க முடியாது.  அரசியல் மாறினால் நாடு மாறும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருக்கிறார். இன்று அரசியல் மாறவில்லை. ஆனால் அரசியல்வாதிகள் மாறிவிட்டார்கள். எனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளேன். எங்களிடம் 13 மாநிலங்களவை எம்பிக்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் யாரும் பட்டியலினத்தவர், பெண்கள் அல்லது பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. இந்த கட்சியில் பட்டியலின எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அனைத்து பட்டியல் இன மக்களும் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறார்கள். இதனால், இனியும் நான் கட்சியில் நீடிப்பது கடினம்.” என்றார்.