சென்னை அருகே வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மணடபத்தில் அதிமுக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு தொடங்கி நடைபெற்று வருகிறது. மேடையில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரின் உருவ படத்திற்கு ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்று வரும், இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான பழனிசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உட்பட 4500- க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2017- ஆம் ஆண்டு செப்டம்பரில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு தற்போது தான் பொதுக்குழு கூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.