Skip to main content

"என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" - தற்கொலை செய்து கொண்ட +2 மாணவர்

Published on 10/01/2023 | Edited on 10/01/2023

 

national level exam incident involved in school student 

 

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கோவர்தனகிரி செல்வா நகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் கார் தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் ஆவடி அருகே உள்ள பருத்திப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இவரது மகன் 12 ஆம் வகுப்பும், மகள் 9 ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விஜயனும், அவரது மனைவியும் பொங்கல் பண்டிகைக்கு புத்தாடைகளை வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளனர். வீட்டில் அவரது மகனும், மகளும் தனியாக இருந்துள்ளனர்.

 

படுக்கை அறையின் உள்ளே சென்ற அண்ணன்  நீண்ட நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால், தங்கை ஜன்னல் வழியாகச் சென்று பார்த்தபோது தனது அண்ணன் தூக்கில் தொங்குவதைக் கண்டு கதறி அழுதுள்ளார். அவரின் அலறல் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், மாணவனை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனை செய்ததில் மாணவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் தற்கொலை செய்து கொண்ட மாணவன் எழுதிய கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினர். அதில், "நீங்கள் விரும்பிய படிப்பை படிக்க எனக்கு விருப்பம் இல்லை. என் விருப்பத்திற்கு நீங்கள் வாழவிடவில்லை. 30 வயதுக்கு மேல் திருமணமாகி வேலைக்கு போன பிறகுதான் நான் ஜாலியாக இருக்க முடியுமா? நான் உயிரோடு இருந்து என்ன பண்ணப்போறேன். என் தங்கையாவது நல்லா இருக்கட்டும்" என ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாணவர் ஜேஇஇ தேர்வுக்கு தயாராகி வந்ததும், இதனால் அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.  இதுகுறித்து போலீசார் மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்