Skip to main content

கொட்டும் மழையில் குடையுடன் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

Published on 22/12/2018 | Edited on 22/12/2018
n

 

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா சனிக்கிழமை காலை நடைபெற்றது. தேர் வீதியுலாவின் போது பலத்த மழை பெய்தது. இதனால்   நான்கு வீதிகளிலும் எந்த இடத்திலும் தேர் நிற்காமல் தேர் புறப்பட்ட இடத்தை ஒரு மணி நேரத்தில் அடைந்தது.  நான்கு வீதிகளில் உள்ள கட்டளைதாரர்கள் தேரில் சாமி வரும்போது  மண்டகப்படி பூஜைகளை செய்வது வழக்கம். கனமழையின் காரணமாக அந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதனைதொடர்ந்து சிதம்பரம் நடராஜர் கோவில்  வளாகத்தில் உள்ள ஆயிரக்கால் மண்டபத்தில் சாமியை இறக்கி வைத்து அந்த இடத்தில் மண்டகபடி நிகழ்ச்சிகளை செய்தனர்.

 

12 ஆண்டுகளுக்கு முன்பு சுனாமி ஏற்பட்டபோதும், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பும் தேர் உறுதி தன்மை சரியில்லையென்று  இதேபோல் தேரை எங்கும் நிறுத்தாமல் கோயிலுக்கு் கொண்டு செல்லப்பட்டது. அதுபோல் இந்த ஆண்டும் சிதம்பரத்தில் பலத்த மழை காரணமாக நடராஜனும் சிவகாமசுந்தரி உள்ளிட்ட ஐந்து தேர்கள் எங்கும் நிற்காமல் நிலையை அடைந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

 

இதனைதொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3 மணிக்கு ஆயிரம்கால் மண்டபத்தில் மகா அபிஷேகபூஜை நடைபெறும். பின்னர் திருவாபாரணம் அலங்காரத்தில் தரிசனம் நிகழ்ச்சி பகல் 1 மணியளவில் நடைபெறும். இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிலையை விமானத்தில் கொண்டுவராமல் ரயிலில் கொண்டுவர காரணம் இதுதான் - பொன். மானிக்கவேல் பேட்டி...

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

கடந்த 1982ம் ஆண்டு தமிழக கோவிலில் இருந்து ஐம்பொன் நடராஜர் சிலை திருடப்பட்டது. இந்த சிலையை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்ட நிலையில், பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
 

pon manikavel

 

 

இதன்பின் பொன் மானிக்கவேல் தலைமையிலான குழு அந்த சிலை ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டுபிடித்து, அதை மீட்டு இந்தியா கொண்டுவந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியிலிருந்து கொண்டுவரப்பட்ட சிலை இன்று காலை சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது. இதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பொன். மானிக்கவேல் கூறியது.

“சிலைகள் கடத்தல் வழக்கில் தமிழக அரசை குறை சொல்ல விரும்பவில்லை. தமிழக அரசுக்கும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கும் இடையே தகவல் பரிமாற்றத்தில்தான் பிரச்சனை உள்ளது.

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க நீதிமன்றங்களே காரணம். சிலைக்கடத்தல் வழக்குகளுக்கு எனது குழு மற்றும் ஊடகங்களும் உதவியாக இருந்தன. ஆஸ்திரேலியாவில் இருந்து நடராஜர் சிலையை மீட்க உதவி செய்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி.

நடராஜர் சிலை அங்குள்ள அருங்காட்சியகத்தில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. எந்த சிலையும் காட்சி பொருள் அல்ல. இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. நடராஜர் சிலையுடன் கடத்தப்பட்ட பழமையான தூண்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். அனுமதி அளித்தால் எல்லா சிலைகளும் மீட்கப்படும்.

எங்களுக்கு அரசு நிதி அளிக்கவில்லை, அதனால்தான் டெல்லியிலிருந்து விமானத்தில் எடுத்துவரமுடியாமல் சிலையை ரயிலினின் மூலம் சென்னை எடுத்துவந்தோம். சொந்த ஒய்வூதியத்தில் சிலைகளை கண்டுபிடிக்கும் எனக்கு எந்த அகம்பாவமோ, ஆணவமோ இல்லை” என்று கூறியுள்ளார். 

 

 

Next Story

ஆஸியில் மீட்கப்பட்ட ரூ. 30 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை சென்னை வந்தது..

Published on 13/09/2019 | Edited on 13/09/2019

நெல்லை மாவட்டத்தின் தாமிரபரணிக் கரை அருகில் கல்லிடைக்குறிச்சி நகரில் அறம் வளர்த்த நாயகி சமேத குலசேகரமுடையார் ஆலயம் உள்ளது. இந்த கோவில் மன்னர் குலசேகரப்பாண்டியனால் சுமார் 700 ஆண்டுகளுக்ககு முன்பு கட்டப்பட்டதாக வரலாறு குறிப்பிடுகிறது. மேலும் மன்னரால் படித்தனமாக கோவிலுக்கு நில புலன்கள் தரப்பட்டும், அவரால் மதிப்பு மிக்க ஐம்பொன் சிலைகளும் செய்யப்பட்டு, அந்த சிலைக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரளவு பராமரிக்கப்பட்டு வந்த இந்த ஆலயம், குறைபாடுகள் காரணமாகப் புராதன ஆலயமாக மாறிப்போனாலும், இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டிற்குள் வந்தது. விலை மதிப்பற்ற சிலைகள் இருந்தாலும், அதன் மதிப்பறியாத துறை போதிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யவில்லை, என்பது கவனிககத்தக்கது. அதுவே திருட்டிற்கும் வழி வகுத்து விட்டது.
 

pon manikavel

 

 

இதனிடையே பக்தர்களின் வழிபாட்டிற்குரிய சிறப்புகளைக் கொண்ட நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்க வாசகர் மற்றும் ஸ்ரீபலிநாதர் உள்ளிட்ட ஐம்பொன்னாலான நான்கு சிலைகள் கடந்த 1982 ஏப்ரல் மாதம் மர்மநபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கோவில் கருவறையின் இரும்புக் கதவின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து அப்போதைய கோவில் டிரஸ்டியான பாபநாச முதலியார் கல்லிடைக்குறிச்சிக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், பல நூறு ஆண்டுகள் பழமையான இரண்டரை அடி உயரமுள்ள நடராஜர் சிலை. இரண்டு அடி உயரம் கொண்ட சிவகாமி அம்பாள் சிலை, ஒன்றரை அடி உயரமுள்ள மாணிக்கவாசகர் சிலை ஒரு அடி உயரமுள்ள ஸ்ரீபலிநாயகர் என்று ஐம்பொன் சிலைகள் திருடு போனதும் அவைகளில் நடராஜர் சிலை மட்டும் 30 கோடி மதிப்புள்ளது என்றும் தெரிய வந்தது.

ஒரு கட்டத்திற்கு மேல் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் இது நிலுவையில் வைக்கப்பட்டது. பின்னர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யான பொன்.மாணிக்கவேலின் குழுவினர் கோவிலை ஆராய்ந்தனர். அதன் பிறகு விசாரணை மேற்கொண்டனர். மேலும் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் போன்றவைகளை ஆய்வு செய்து அவைகளின் பாதுகாப்பற்ற தன்மையை தெரிந்து கொண்டார். இதனால் மீதமுள்ள 17 சிலைகள் அருகிலுள்ள சுப்பிரமணியசுவாமி ஆலயத்திற்கு மாற்றப்பட்டது.

அதன் பின் ஐ.ஜி.யின் விசாரணையில் கொள்ளை போன சிலைகளில் நடராஜர் சிலை மட்டும் ஆஸ்திரேலியாவிலுள்ள அடிலாய்டு அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரிய வர, அதனை மத்திய அரசின் உதவியோடு மீட்டனர். ஆஸ்திரேலியா சென்ற சிலை தடுப்பு பிரிவினர் அருங்காட்சியப் பதிவாளர் ஜேன் ராபின்சன், மற்றும் ஜேம்ஸ் பென்னட் ஆகியோரிடமிருந்து நடராஜர் சிலையப் பெற்றனர். பின்னர் அது டெல்லி கொண்டு வரப்பட்டு பின்பு கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு தனி நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்பட்டு அதன் பின் நடராஜர், மக்களின் வழிபாட்டிற்காக கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் ஆலையம் கொண்டு வரப்படுகிறார்.

இந்நிலையில், சென்னை செண்ட்ரல் ரயில் நிலயத்திற்கு இன்று காலை வந்த பஞ்சலோக நடராஜர் சிலைக்கு மக்கள் ஆரவாரமான வரவேற்பை கொடுத்தனர். சென்னை வந்த சிலையை நெல்லை மாவட்டம் கல்லிடக்குறிச்சிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த நடராஜர் சிலையின் மதிப்பு சுமார் ரூ. 30 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்ட சிலை. பின்னர் டெல்லியிலிருந்து ரயிலின் மூலம் இன்று காலை சென்னை வந்தடைந்தது. இந்த சிலையை பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு மீட்டுள்ளனர்.