வேலூர் சிறையில் நளினி உண்ணாவிரதம்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் மத்திய சிறையிலும், இவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன்பு சிறை வார்டன்கள் முருகன் அறையில் சோதனை நடத்தியபோது, அங்கு இருந்த 7 ஆயிரத்து 500 மற்றும் செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் முருகன் கடந்த 3 வாரங்களாக மனைவியை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை. சிறையில் பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக மனைவி நளினி மற்றும் மனுபோட்டு பார்க்க வரும் வெளிநபர்களையும் சந்திக்க முருகனுக்கு 2 மாதம் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வேலூர் சிறையில் உள்ள முருகன், நளினி ஆகியோரை அவர்களது வழக்கறிஞர் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார்.
பின்னர், அவர் நிருபர்களிடம், ‘’ முருகன், நளினியை கடந்த 3 வாரங்களாக சந்திக்கவில்லை. அதேபோல், முருகன், மனுதாரர்களை சந்திக்கவும் 2 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முருகன், சிறைத்துறை டிஜிபி ராஜேந்திரனுக்கு கடிதம் எழுதி உள்ளார். கணவனை சந்திக்க தடைவிதிக்கப் பட்டுள்ளதால், நளினி நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவரிடம் பெண்கள் சிறை நிர்வாகம் சமரசம் பேசி வருகிறது’’ என்றார்.