Skip to main content

பாஜகவில் இருந்து திமுகவில் மீண்டும் ஐக்கியமான வேதாரண்யம் வேதரத்தினம்; நாகை அரசியல் பரபரப்பு

Published on 22/07/2020 | Edited on 22/07/2020
nagai vedharathinam joint in dmk

 

பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை வேதாரண்யம் சட்டமன்ற தொகுதியில் அசைக்கமுடியாத சக்தியாக விளங்கியவர் திமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத்தினம், பிறகு பாஜகவிற்கு சென்று மீண்டும் அவரது தாய் கழகமான திமுகவிற்கே திரும்பியிருக்கிறார்.

 

நாகை மாவட்டத்தின் கடலோர பகுதியான வேதாரண்யத்தை அடுத்துள்ள தேத்தாக்குடியை சேர்ந்தவர் வேதரத்தினம். எஸ்.கே.வி என அப்பகுதி மக்களால் அழைக்கப்படும் வேதரத்தினம். திமுகவில்12 ஆண்டுகள் ஒன்றிய செயலாளராகவும், 1996, 2001, 2006 ஆகிய மூன்று சட்டமன்ற தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

 

அடுத்து 2011ல் நடந்த தேர்தலில் அவருக்கு சீட் வழங்காமல், அப்போது கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு வழங்கப்பட்டது வேதாரண்யம் தொகுதியை தாரைவார்த்தது திமுக. அதனால் திமுக மீது கோபமான வேதரத்தினம் சுயேச்சையாக போட்டியிட்டு பாமக வேட்பாளராக போட்டியிட்ட சின்னத்துரையை விட அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்து, திமுக கூட்டணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தார்.

 

nagai vedharathinam joint in dmk


அதன்பிறகு தனிமரமாக இருந்தவரை தேசிய கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகும் வாய்ப்பை பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் பிறகு 2016-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் வேதாரண்யம் தொகுதியில் போட்டியிட்டார். அவருக்காக பிரதமர் மோடியே ஆகாய மார்க்கமாக தேத்தாக்குடிக்கு வந்து பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டார். ஆனாலும் அந்த தேர்தலில் வேதரத்தினத்தால் அதிமுக சார்பில் போட்டியிட்ட சிட்டிங் அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம் ஈடுகொடுக்க முடியாமல் தோல்வியை தழுவினார்.

 

ஆனாலும் பெயர் சொல்லும் அளவிற்கு வாக்குகளைப் பெற்று தனது செல்வாக்கு குறையவில்லை என்று அரசியல் வட்டாரத்தில் மார்தட்டிக்கொண்டார். அதன் பிறகு மாநில பொறுப்பில் இருந்தவருக்கு, மாநில பொது செயலாளர் பதவி கிடைக்கும் என்று நம்பி இருந்தநிலையில், சமீபத்தில் நடந்த கட்சி அறிவிப்பில் மாநில பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு தேசிய பொதுக்குழு உறுப்பினராக்கி டம்மியாக்கினர். பொறுப்பை வழங்கி அவரை ஓரம்கட்டும் நிலை உருவானது. மீண்டும் விரக்தியான வேதரத்தினம் அதிமுகவா, திமுகவா என்கிற நிலைப்பாட்டிற்கு சென்றிருக்கிறர். அந்த சமயத்தில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மூலம் திமுகவில் ஐக்கியமாகும் முடிவை எடுத்து, திமுக தலைவர் ஸ்டாலினிடம் ஒப்புதல் வாங்கி இன்று மாலை வேதாரண்யம் நகர அலுவலகத்தில், வீடியோ கால் மூலம் மீண்டும் திமுகவில் சேர்ந்திருக்கிறார்.

 

nagai vedharathinam joint in dmk


அதன்பின் திமுக நகர கட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக சென்று வேதாரண்யம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.