Skip to main content

திருந்தி வாழும் கொலை குற்றவாளி... விடாத போலீஸ்... தற்கொலைக்கு முயன்ற பயங்கரம்...!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

Nellai SP Office singaravelu made tragedy

 

கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த ஒருவர், திருந்தி மனைவியோடு கூலி வேலைக்குச் சென்றாலும் காவல்துறை தொந்தரவு செய்வதாக தீக்குளிக்க முயற்சித்த சம்பவத்தால் நாகை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

 

நாகை அக்கரைக்குளம் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலு என்பவர், 17 வயதில் நாகையில் நடந்த கொலை வழக்கு ஒன்றில் கைதாகி, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் தண்டனை அனுபவித்து, தண்டனை காலம் முடிந்து தற்போது பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

 

இந்த நிலையில், திருந்தி வாழும் தன்மீது நாகை நகர போலீசார் அடிக்கடி பொய் வழக்கு போடுவதாக கூறி, சிங்காரவேலு நாகை எஸ்.பி. அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். எஸ்.பி. அலுவலகம் நுழைவு வாயிலுக்குள் தனது மனைவியுடன் வந்த அவர், தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை தலையில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி தூக்கிவீசிவிட்டு, சிங்காரவேலன் தலையில் தண்ணீரை ஊற்றி அவரை காப்பாற்றினர். 

 

Nellai SP Office singaravelu made tragedy

 

தொடர்ந்து தீக்குளிக்க முயற்சித்த சிங்கார வேலுவை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். "தெரியாத வயதில் செய்த குற்றத்திற்காக தண்டனை அனுபவித்துவிட்டு வந்து, ஒரு ஏழை பெண்ணை திருமணம் செய்துகொண்டு திருந்தி வாழும் என்னை, போலீஸார் தொந்தரவு செய்யுறாங்க, கேஸ் போட ஆளில்லன்னா என்மீது வழக்கை போட்டுடுறாங்க, இனி சாவதை விட வேற வழி தெரியல" என்கிறார் சிங்காரவேலன்.

 

“என் வீட்டுக்காரர் பேக்கரியில ராத்திரி பகலா கூலி வேலை செய்றதால எங்க வயிறு நிறம்புது. எப்பவோ தெரியாத வயதில் செய்த தவறுக்கு தண்டனையும் அனுபவிச்சிட்டார். ஆனாலும் நாகை நகர போலீசார் விடாமல் தொடர்ந்து தொல்லை கொடுக்குறாங்க. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து எங்களை நிம்மதியாக வாழ வழிவகை செய்ய வேண்டும்" என்கிறார் சிங்காரவேலனின் மனைவி.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தீ பற்றி எரிந்த குடிசை வீடுகள்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
nagai cottages incident Case against BJP

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் நாகையில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதனை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துப்பூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலர் வீரமணி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவினர் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட வெடியை விற்பனை செய்த, தம்பிதுரை பூங்கா அருகே உள்ள வெடி கடைக்கும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.  

Next Story

பாஜக வெடித்த பட்டாசு; இரண்டு குடிசைகள் எரிந்து நாசம்; மக்கள் போராட்டம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
BJP burst firecrackers; Two huts were destroyed by fire; People's struggle

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் நாகையில் பாஜக வேட்பாளர் பிரச்சாரத்தின்போது வெடிக்கப்பட்ட பட்டாசு இரண்டு குடிசைகள் மீது பட்டு, பற்றி எரிந்துள்ளது. இதனால் குடிசை வீடுகள் இரண்டு முற்றிலும் சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்தப் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால் பட்டாசு வெடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது பட்டாசு பொறிகள் அருகில் இருந்த குடிசை வீடுகளில் பட்டு இரண்டு வீடுகள் பற்றி எரிந்தது. இதில் பக்கிரிசாமி, சுப்பிரமணியன் ஆகிய இருவரின் குடிசை வீடுகள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இந்நிலையில் அந்தப் பகுதியில் இருந்த மக்கள் குடிசை வீட்டை இழந்தவர்களுக்கு ஆதரவாக பாஜக நிர்வாகிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பாஜக மாவட்டத் தலைவர் கார்த்திகேயனை முற்றுகையிட்டு வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இழப்பீடு வழங்கப்படும் என எழுத்துபூர்வமாக தெரிவித்தால் மட்டுமே பாஜக மாவட்டத் தலைவரை விடுவிப்போம் எனக்கூறி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.