Skip to main content

’அதிமுகவிற்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் நல்லா வாழந்ததில்லை’- செந்தில்பாலாஜிக்கு வாசாக்குவிடும் காமராஜ்

Published on 14/12/2018 | Edited on 14/12/2018
ம்

 

முன்னாள் அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வது பற்றி எங்களுக்கு கவலையில்லை. அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்றார் அமைச்சர் காமராஜ். 

 

திருவாரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அலிவலம், தப்ளாம்புலியூர், உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரணப் பொருட்களை வழங்கிய அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "கஜா புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  புயல் பாதிப்பில் பாதிக்கப்பட்ட 40 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்கில் இதுவரை ரூ19 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.  புயல் பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

கஜா புயல் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்து ரூ 15,000 கோடி கேட்டுள்ளார். மத்தியகுழு புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை வழங்கியுள்ளது. மத்திய அரசு தமிழக அரசிடம் கூடுதல் தகவல்களை கேட்டுள்ளார்கள்.  அதுவும் விரைவில் வழங்கப்பட்டுவிடும்.  அதன் பிறகு மத்திய அரசு உரிய நிதியை வழங்கும் என நம்புகிறோம் என்றார்.

 

அவரிடம்,  கஜா புயல் பாதிப்பில் தமிழக அரசு உரிய புள்ளிவிவரங்களை அளிக்கவில்லை என மத்திய அரசு குறை கூறி வரும் நிலையில் மத்திய அரசு முதல்வர் கேட்ட 15 ஆயிரம் கோடியில் 5% கூட வழங்கவில்லை. மத்திய அரசு எப்படி தமிழக அரசு கேட்கும் நிதி வழங்கும் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு,

"கண்டிப்பாக பாதிப்புக்கு ஏற்றவாறு மத்திய அரசு உரிய நிதியை வழங்கும்." என்றார்.

 

அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு "தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும். முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஆலோசித்து கூட்டணி குறித்து தெரிவிப்பார்கள்." என்றார்.

 

பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்பு எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க முடியாது என கூறியிருப்பது குறித்து  ?

"நீதிபதிகளின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது.  இந்த பதவி நீட்டிப்பு தடை வழங்காதது தமிழக அரசுக்கு ஒருபோதும் பின்னடைவாக இருக்காது."  என்றார்.

 

 செந்தில் பாலாஜி திமுகவில் சேர்வது  குறித்து ?

செந்தில்பாலாஜி திமுகவில் சேர்வது பற்றி எங்களுக்கு  எந்த கவலையும் இல்லை.  அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் ஒரு போதும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுக தொண்டர்கள் ஒருபோதும் வேறு கட்சிக்கு செல்ல மாட்டார்கள்"  என  முடித்தார்
அமைச்சர் காமராஜ். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது  குற்றப்பத்திரிகை தாக்கல் 

Published on 11/07/2023 | Edited on 11/07/2023

 

Charge sheet filed against ADMK former minister

 

அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது மகன்கள், உறவினர்கள் கூட்டுச் சேர்ந்து வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்திருப்பதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆறு பேர் மீது திருவாரூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

 

கடந்த அதிமுக ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக இருந்தவர் ஆர். காமராஜ். தற்போது அதிமுக திருவாரூர் மாவட்டச்  செயலாளராகவும், நன்னிலம் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் இருந்து வருகிறார். காமராஜ் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அமைச்சராக இருந்தபோது, அரசு பதவியைத் தவறாகப் பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாகத் தனது பெயரிலும், மகன்கள், மனைவி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் எனப் பலரது பெயரிலும் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய்க்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்தது.

 

அதை உறுதிசெய்து அதன் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் அவரது மகன்கள் எம்.கே.இனியன், எம்.கே. இன்பன், உறவினர் ஆர். சந்திரசேகர், நண்பர்கள் கிருஷ்ணமூர்த்தி, எஸ். உதயகுமார் ஆகியோர் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் உள்ள ஆர். காமராஜ் வீடு, தஞ்சாவூர் பூக்கடை மேலவாஸ்து தெருவில் உள்ள அவரது சம்பந்தி டாக்டர் மோகன், தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் மருத்துவமனை எனத் தமிழகம் முழுவதும் 51 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

 

அந்த சோதனையில் 41 லட்சத்து 6 ஆயிரம் ரொக்கம், 963 பவுன் நகைகள், 24 கிலோ வெள்ளி, செல்போன்கள், லேப்டாப், பென்டிரைவ் ஹார்டு டிஸ்க் மற்றும் ஆவணங்கள் எனக் கைப்பற்றப்பட்டன. அதோடு கணக்கில் வராத ரூ. 15.50 லட்சம் பணம், வங்கி லாக்கர் சாவி உள்ளிட்டவற்றையும் கைப்பற்றி விசாரணை நடந்து வந்தது. “ஊழல் தடுப்பு போலீசார் எங்களது வீட்டில் நடத்திய சோதனையில் எந்தவித ஆவணங்களையும் கைப்பற்றவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த ரைடு நடந்தது” என அப்போது ஆர். காமராஜ் பேட்டியளித்தார்.

 

இந்த நிலையில், இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 127 கோடியே 49 லட்சம் அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாகக் கூறி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார், திருவாரூர் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கின்றனர். அதோடு சொத்து சேர்த்த வழக்கில் 810 பக்கத்திலான குற்றப் பத்திரிகையை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்தனர். குற்றப்பத்திரிகையுடன் 18,000 ஆவணங்களும் பெட்டி பெட்டியாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக போலீசார் வட்டாரத்தில் கூறுகின்றனர்.

 

இதுகுறித்து ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு போலீசார் வட்டாரத்தில் விசாரித்தோம், “ஆர். காமராஜ் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது நண்பர்கள் சந்திரகாசன், கிருஷ்ணமூர்த்தி, உதயகுமார் உள்ளிட்டவர்களோடு கூட்டு சேர்ந்து நார்க் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்கிற பினாமி பெயரில் இடத்தை வாங்கி அதில் அவரது மகன்களான இனியன், இன்பன் பெயரில் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் என்கிற பல்நோக்கு மருத்துவமனை கட்டியுள்ளார். 127 கோடியே 49 லட்சத்து 9 ஆயிரத்து 85 ரூபாய் வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்திருப்பது ஆதாரத்தோடு தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, ஆர். காமராஜ் அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட ஆறு பேர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறோம். விரைவில் அவரைக் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்கிறார்கள்.

 

 

Next Story

முன்னாள் அமைச்சர் காமராஜின் ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை (படங்கள்) 

Published on 08/07/2022 | Edited on 08/07/2022


 

அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் காமராஜ், கடந்த 2015- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ. 58.44 கோடி சொத்து சேர்த்ததாக வந்த புகார் எழுந்தது. இது தொடர்பாக இன்று (08/07/2022) அதிகாலை முதல் காமராஜுக்கு சொந்தமான வீடு, அலுவலகம் உள்பட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது. அந்த வகையில், சென்னை மயிலாப்பூர், வெங்கடாச்சல முதலி தெருவில் அமைந்துள்ள காமராஜின் ஆடிட்டர் அலுவலகத்தில் சோதனை நடந்துவருகிறது.