
சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடகிழக்கு பருவமழை கடந்த திங்கள்கிழமை முதல் பெய்து வருகிறது. இதனால் இப்பகுதிகளில் உள்ள ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகள் நிரம்பி வருகின்றன. சில இடங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நிலையில் வாய்க்கால்களில் ஆகாயத் தாமரை செடிகள் அடைத்து இருப்பதால் தண்ணீர் வடிவதற்கு தாமதம் ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து சிதம்பரம் நகரத்தில் 5 இடங்களிலும் மற்ற பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் ஆகாயத் தாமரை செடிகளை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில் தில்லையம்மன் ஓடை பகுதியில் நடைபெறும் ஆகாயத் தாமரை அகற்றும் பணியை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார். இவருடன் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் மற்றும் நகராட்சி ஆணையர் பிரபாகரன், பொறியாளர் மகாராஜன், நகர்மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் வெங்கடேசன், மணிகண்டன், திமுக நகர துணை செயலாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.