Skip to main content

சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Metro train service extension

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. அந்த வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22 இல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (26-03-2024) மாலை 07.30 மணிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டான்ஸ் அணிகளிடையே போட்டி நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை இரவு 11:00 மணி முதல் அதிகாலை 01:00 மணி வரை (27-03-2024 - 01.00 AM) மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் சேப்பாக்கம் மைதானம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக கூட்ட நெரிசல் இருப்பதால், தொலைத்தொடர்பு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே மைதானத்தில் இருக்கும்போது ஆன்லைனில் பயணச்சீட்டு பெறுவது கடினமாக இருக்கும். கிரிக்கெட் போட்டிக்குப் பிறகு அரசினர் தோட்டம் அல்லது சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையங்களில், கூட்ட நெரிசல் இருப்பதால் பயணச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பயணிகள் வீடு திரும்புவதற்கு தங்கள் மெட்ரோ பயணச்சீட்டுகளை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். ஆன்லைனில் (சென்னை மெட்ரோ ரயில் நிறுவன ஆப், பேடிஎம் ஆப், போன்பே ஆப், வாடஸ் அப், போன்றவை) மூலம் பயணச்சீட்டை பெறலாம். அல்லது மைதானத்திற்கு செல்வதற்கு முன் ஏதேனும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள பயணச்சீட்டு விற்பனை செய்யும் கவுண்டர்களில் பெற்றுகொள்ளலாம். பயணிகளின் வசதிக்காக அரசினர் தோட்டம் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையங்களில் ஒரு முறை பயணம் செய்யும் பயணச்சீட்டை ரூ.50 செலுத்தி பெற்றுக்கொண்டு எந்த மெட்ரோ நிலையத்திலிருந்தும் பயணிக்கலாம். இரவு 11.00 மணிக்குமேல் அரசினர் தோட்டம் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து மட்டும் ரயில்கள் செல்லும் என சென்னை மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பச்சை வழித்தடத்திற்கு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்