
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கும் நிலையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 18 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று வேகம் அதிகரித்து தற்போது 20 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதனால் நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 13 மாவட்டங்களில் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை என அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.