Skip to main content

மாமூல் தர மறுத்த கடைக்காரரை அடித்து கொன்ற இளைஞர்கள்!

Published on 05/05/2022 | Edited on 05/05/2022

 

medical shop owner passed away in perambalur

 

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் - துறையூர் செல்லும் சாலையில் இருந்து சில கிலோமீட்டர் உள்ளே உள்ளது லாடபுரம் என்ற கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன்(46). இவர், அதே கிராமத்தில் சிறிய அளவில் மருந்துக்கடை (மெடிக்கல்) வைத்து நடத்தி வருகிறார். 

 

அதே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிரபாகரன்(29), ரகுநாத்(27). இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்பு மருந்துக் கடை நாகராஜனை மிரட்டி மாமூல் பணம் கேட்டுள்ளனர். அவரும் பயந்து கொண்டு, அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட மேற்படி ரவுடிகள் இருவரும் மீண்டும் நேற்று முன்தினம் நாகராஜன் கடைக்கு சென்று மாமூல் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். அப்போது நாகராஜன் மாமூல் தர மறுத்துள்ளார். அதோடு ரவுடிகளின் பெற்றோர்களிடம் சென்று இதுகுறித்து அவர் புகார் தெரிவித்துள்ளார். 

 

இந்த தகவல் அறிந்த அவர்கள் இருவரும் அன்று இரவு வீட்டிலிருந்து நாகராஜனை வெளியே வரவழைத்து பயங்கரமான ஆயுதங்களால் அவரை தாக்கி விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்த நாகராஜனின் உறவினர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து நாகராஜனை அடித்து கொலை செய்த ரவுடிகள் பிரபாகரன், ரகுநாத் ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்