Skip to main content

அம்பேத்கர் படம் வைக்க தடை; 144 உத்தரவால் போராட்டக்களமான மயிலாடுதுறை ஆட்சியரகம்

Published on 07/12/2022 | Edited on 07/12/2022

 

அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை நாடே நேற்று அனுசரித்து வந்த நிலையில், மயிலாடுதுறை பகுதியில் அவரது படம் வைக்ககூடாது என 144 தடை உத்தரவு பிறப்பித்திருப்பதை கண்டித்து வி.சி.க.வினர் ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி அம்பேத்கரின் உருவப்படத்தை வைக்கச்செய்தனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம், பட்டவர்த்தி கடைவீதியில் கடந்த ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு முன்னாள் வி.சி.க. மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கரின் உருவப்படத்தை வைத்து மரியாதை செலுத்த ஆயத்தமாகினர். படம் வைப்பதைத் தடுக்கும் நோக்கத்தோடு அந்தப் பகுதியில் உள்ள பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சிலர் கலவரத்தைத் தூண்டி கல், கம்பு மற்றும் கொடூர ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். அப்போது அங்கு குவிக்கப்பட்டிருந்த காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.

 

ஆனாலும் அம்பேத்கர் படத்தை பட்டவர்த்தி பகுதியில் வைக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொடர் போராட்டத்தை நடத்தினர். அக்கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதோடு நீதிமன்றத்திற்கும் சென்றார். இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடந்த பேச்சுவார்த்தையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அந்த பகுதியில் அம்பேத்கரின் படம் வைக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

 

இந்த நிலையில், இந்த ஆண்டு அம்பேத்கரின் நினைவு தினமான டிசம்பர் 6ம் தேதிக்கு முந்தைய நாளே அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து விசிகவினர் போராட்டத்தில் இறங்கினர்.

 

இதுகுறித்து விசிகவின் முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த ஆண்டு ஏற்பட்ட கலவரத்தால் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை பட்டவர்த்தி மதகடி பகுதியில் கொண்டாட முடியாமல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும் நினைவுநாளில் மாவட்ட நிர்வாகமே தலைஞாயிறு மதகடி பகுதியில் அம்பேத்கருக்கு மரியாதை செய்வதாக எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததால் நாங்கள் நிகழ்ச்சியைக் கைவிட்டோம். ஆனால், உடன்படிக்கை படி நடக்காமல் இன்று (டிச. 6) அம்பேத்கர் நினைவு தினத்தில் தலைஞாயிறு மதகடி பகுதியில் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.   

 

நீதிமன்றமும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அம்பேத்கர் நினைவு தினத்தை அனுசரிக்க அனுமதி கேட்ட பொறுப்பாளர்களுக்கு எந்தத் தகவலும் அளிக்காமல், நள்ளிரவில் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி உள்ளது. அரசு உடனடியாக இந்தப் பிரச்சனை தொடர்பாக உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்தார்.

 

அதோடு மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு பெருந்திரள் போராட்டத்தைத் துவங்கினார். இரவு பத்து மணி வரை தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதன் முடிவில், கடந்த ஆண்டு உத்தரவாதம் கொடுத்தபடியே அரசு சார்பில் அம்பேத்கரின் படத்தை வைத்து மரியாதை செலுத்தியதைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்