![mason passed away by accident](http://image.nakkheeran.in/cdn/farfuture/JJaKLRBi_gc734xL80KjziuKku5s1jNd7wGjqcjMU5w/1643867306/sites/default/files/inline-images/dead-body_25.jpg)
விழுப்புரம் மாவட்டம் ஊரல் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி சுரேஷ்(35). இவர் நேற்று முன்தினம் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள ஒரு தனியார் கட்டிடத்தின் மேல் தளத்தில் பூச்சு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கட்டிடத்தின் அருகே சென்ற உயர் மின் அழுத்த மின்சார கம்பியில் எதிர்பாராதவிதமாக மேஸ்திரி சுரேஷ் சிக்கி மின்சார லைனில் தொங்கியபடி உடல் கருகி உயிரழந்துள்ளார்.
அவருடன் வேலை செய்த தொழிலாளர்கள் மின்சாரத்தை நிறுத்தி விட்டு கயிறு மூலம் அவரது உடலை மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக ரோசனை போலீசார் வழக்குப் பதிவு செய்து உரிய பாதுகாப்பின்றி வேலை செய்ய தொழிலாளர்களை அனுமதித்ததாக கட்டிட காண்டிராக்டர் அசோக், மேஸ்திரி முனிவேல் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அவர்களை கைது செய்து விசாரித்தும் வருகின்றனர்.
இந்த நிலையில் சுரேஷின் உறவினர்கள் சுரேஷ் உயிரிழந்த சம்பவத்தில் உரிய நீதி விசாரணை நடத்த வேண்டும், இறந்துபோன சுரேஷின் குடும்பத்திற்கு போதிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ரோசனை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால் ரோசனை காவல் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.