
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்யா(28. இவர் கடந்த 17 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த போது, அந்த வழியாக வந்த அருள் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் இல்லை, அதனால் உங்கள் ஸ்கூட்டியை கொடுங்கள் பங்கிற்கு சென்று பெட்ரோல் வாங்கி வருகிறேன் என்று சத்யாவிடம் கேட்டுள்ளார்.
அதற்கு சத்யா, “நீங்கள் யார் என்று தெரியாது; உங்களுக்கு நான் ஏன் ஸ்கூட்டியை கொடுக்க வேண்டும்? என்று கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருள், சத்யாவை ஆபாசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்துவிட்டுச் சென்றுள்ளார். அதன்பின் வீட்டிற்கு வந்த சத்யாவின் உறவினர்களான கவியரசன் மற்றும் சிலம்பரன் ஆகிய இருவரிடம் நடந்த சம்பவம் குறித்துக் கூறியுள்ளார். இதையடுத்து கவியரசன், சிலம்பரசன் மற்றும் அவர்களது நண்பர் செந்தில் என மூன்று பேரும் அருளை தேடிச் சென்றனர். அருள் எங்குத் தேடியும் கிடைக்காததால் அவரது தாய் மாமன் ஏழுமலையின் வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு அருள் குறித்து மூன்று பேரும் கேட்டுச் சத்தம்போட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த ஏழுமலையின் தாய்மாமன் நாராயணன்(70) இவர்களிடையே சமாதானம் பேசி அனுப்பியுள்ளார்.
இந்த நிலையில் சமாதானம் பேசி வைத்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்த நாராயணனை வழிமறித்த கவியரசன், சிலம்பரசன், மற்றும் செந்தில் ஆகிய மூன்று பேரும் மறைத்து வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த நாராயணன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகொலை செய்யப்பட்ட நாராயணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாராயணனை படுகொலை செய்துவிட்டு தப்பி ஓடி தலை மறைவான கவியரசன் சிலம்பரசன்மற்றும் அவரது நண்பர் செந்தில் ஆகிய மூவரையும் போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் செந்தில் என்பவரை நேற்று இரவு போலீசார் கைது செய்து உள்ள நிலையில் முக்கிய குற்றவாளியான சிலம்பரசன் மற்றும் கவியரசன் ஆகிய இருவரும் இன்று உளுந்தூர்பேட்டை நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் கடலூர் மத்தியச் சிறையில் அடைத்துள்ளனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவெடுத்துள்ள போலீசார் அதற்கு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.