Skip to main content

ஆன்லைன் சூதாட்டத்தால் தம்பதிகள் தற்கொலையா? - மதுரை அருகே சோகம் 

Published on 21/05/2019 | Edited on 21/05/2019

 

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டான ரம்மி மூலம் ஏற்பட்ட இழப்பு காரணமாக தம்பதிகள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவத்தால் மதுரை மாவட்டம் நாகமலை அருகே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இம்மரணம் குறித்து நாகமலை போலீஸார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

m

 

மதுரை மாவட்டம் நாகமலை அருகே உள்ளது என்ஜிஜிஓ காலனி. இங்குள்ள தெரசா வீதியில் வேங்கட சுப்பிரமணியன் (41), பட்டு மீனாட்சி (33) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது.

 

வேங்கட சுப்பிரமணியன் ஆந்திர மாநிலம் திருப்பதியைச் சேர்ந்தவர் என்றும் அவரது மனைவி பட்டு மீனாட்சி மதுரை திருநகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்லப்படுகிறது. மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பை நிறைவு செய்த வேங்கட சுப்ரமணியன் டேட்டா அனலைஸிஸ் எனும் தரவுப் பகுப்பாய்வில் நிபுணத்துவம் பெற்றவராவார். ஆகையால் பல்வேறு அமைப்புகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தப் பணிகளைச் செய்து வந்ததுடன், தன்னுடைய துறை சார்ந்த ஆய்வில் பல மாணவ, மாணவியரையும் வழிநடத்தி வந்தார்.

 

பட்டு மீனாட்சி ஆய்வு மாணவியாக வேங்கட சுப்பிரமணியனிடம் வந்து சேர்ந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்து. கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இவர்களின் வீடு ஆள் அரவமின்றிக் கிடந்ததுடன், அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் நாகமலை போலீஸாருக்குத் திங்கட்கிழமை பிற்பகல் தகவல் அளித்துள்ளனர்.

 

m

 

வீட்டை சோதனை செய்த போலீஸார், கதவைத் திறந்து மாடிக்குச் சென்று பார்த்தபோது அங்கே வேங்கட சுப்பிரமணியனும், அவரது மனைவி பட்டு மீனாட்சியும் மிகக் கோரமான நிலையில் தூக்கில் பிணமாகத் தொங்கியுள்ளனர். இதனையடுத்து பிரேதங்களைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்கள் இறந்து 5 நாட்களுக்கு மேலாகியிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

 

தம்பதிகளின் மரணம் குறித்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகையில், 'யாருக்கும் எந்தவிதமான தொந்தரவும் இன்றி, வாழ்ந்து வந்தவர்கள். திடீரென இவ்வாறு இறந்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. கம்ப்யூட்டர், ஆன்லைன் தொடர்பான வேலைகளை கணவனும் மனைவியும் சேர்ந்தே செய்து வந்தனர். மிக ஆடம்பரமாக வாழ்ந்த இவர்கள் ஆன்லைன் ரம்மி சூதாட்டம் மூலமாக பணத்தை இழந்துவிட்டார்கள். ஆகையால் அந்த அவமானம் தாங்காமல் தற்கொலை செய்திருக்கலாம்' என்றனர். 

மேலும் இவர்களுக்குத் திருமணமாகி ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இதுவரை குழந்தைப் பேறு இல்லை. அதன் காரணமாகவும் மனம் நொந்து இந்த முடிவை மேற்கொண்டிருக்கக்கூடும் எனவும் தெரிவித்தனர். நாகமலை போலீஸார் அங்கு கிடைத்த ஆவணங்களைக் கைப்பற்றி தொடர்ந்து பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்பதியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாகமலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்