Skip to main content

அசுர வேகத்தில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்; அடுத்த மாதம் அறிக்கை தாக்கல்

Published on 10/06/2023 | Edited on 10/06/2023

 

Madurai Coimbatore Metro Project at breakneck speed; Report submission next month

 

சென்னை மெட்ரோ ரயில் சேவையைத் தொடர்ந்து கோவை, மதுரை ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழ்நாடு அரசு ஆயத்தமாகி வருகிறது. ரூ. 8500 கோடியில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரை 31 கி.மீ. தொலைவுக்கு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் அமைக்கும் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஐதராபாத் நிறுவனத்துக்கு கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை 75 நாட்களுக்குள் தயாரித்து வழங்குமாறும் மெட்ரோ ரயில் நிறுவனம் ஐதராபாத் நிறுவனத்திடம் அறிவுறுத்தியிருந்தது.  

 

அதேபோல் கோவை மெட்ரோ ரயில் திட்டமும் ரூ. 9424 கோடி மதிப்பீட்டில் 139 கி.மீ. தொலைவுக்கு 3 கட்டங்களாக செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக 45 கி.மீ. தொலைவுக்கு அவிநாசி முதல் கருமத்தம்பட்டி வரை இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உக்கடத்தில் இருந்து சத்தியமங்கலம் சாலையில் உள்ள வலியம்பாளையம் பிரிவு வரை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

இந்நிலையில் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை அடுத்த மாதம் அரசிடம் தாக்கல் செய்யப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி 90% நிறைவடைந்துள்ளதாகவும் மெட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படலாம் என சென்னை மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்