
டாஸ்மாக் வருமானத்தைக் கொண்டு அரசு சில நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்திருந்த பொதுநல வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு, அன்னை சத்யா நகர் பகுதியில் அமைந்துள்ள மதுக்கடை மற்றும் மதுக்கூடத்தை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையில் தான் மது விற்கப்படுகிறதா என்பது குறித்தும் மதுக்கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது குறித்தும் திடீர் ஆய்வு செய்து தேனி மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், டாஸ்மாக்கின் வருமானம் மூலம் அரசு சில நலத்திட்டங்களைச் செயல்படுத்தினாலும், டாஸ்மாக் கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை எனவும் நீதிபதிகள் கருத்துத் தெரிவித்துள்ளார்.