
தென் மண்டல எல்.பி.ஜி டேங்க் லாரி உரிமையாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
தென்மண்டல எல்பிஜி டேங்க் லாரி உரிமையாளர்கள்சங்கம் தமிழகத்தில் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த டேங்கர் லாரி உரிமையாளர்கள் இணைத்துள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களில் இருந்து எரிவாயு நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை டேங்கர் மூலம் வாடகை ஒப்பந்தம் அடிப்படையில் இயக்கி வருகின்றனர்.
இந்நிலையில் எல்பிஜி டேங்கர் உரிமையாளர்கள் சங்க லாரிகள் அந்த எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள் முன்பு வேலை நிறுத்தத்தை தொடங்க அறிவித்திருந்தது. 2025-30 ஆண்டுக்கான புதிய வாடகை ஒப்பந்த விதிகளை எண்ணெய் நிறுவனங்கள் அண்மையில் வெளியிட்டு இருந்தது. அதில் எல்பிஜி லாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த விதிமுறைகளை தளர்த்தக் கோரி மூன்று கட்டங்களாக எல்பிஜி டேங்கர் லாரிகள் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். ஆனால் மூன்று கட்ட பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாததால் இன்று தென் மண்டல அளவில் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.