Skip to main content

காதல் மனைவிக்கு கோவில் கட்டி  வழிபடும் காதல் கணவர்!

Published on 14/02/2019 | Edited on 14/02/2019
s


    
காதல்.....இந்த வார்த்தை பலருக்கு விருப்பம். பலருக்கு வெருப்பு. இந்த நிலையில் தான் காதலர் தினங்களின் கொண்டாட்டத்தினால் காதலர்களை திண்டாடவும் வைக்கிறார்கள். காதல் திருமணங்களில் ஜாதிகள் கடக்கிறது. அவற்றை ஏற்க மறுக்கிறார்கள் பலர். ஆனாலும் ஜாதிகள் கடந்து காதல் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் பெரும்பாலான காதலர்கள் தாங்கள் காதலித்தாலும் தங்களின் பெற்றோர் விருப்பத்துடன் தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று ஆண்டுகள் ஓடினாலும் காத்திருக்கிறார்கள். எப்போது சம்மதம் கிடைக்கிறதோ அப்போதே திருமணம் என்ற காதல் கதைகளும் உண்டு. ஆனால் சமீப காலமாக காதல் என்ற பெயரில் அத்துமீறல்கள் நடப்பதை பெற்றோர்களாலும் பொதுமக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பொது இடங்கள், சுற்றுலா தளங்களில் காதலர்கள் என்ற பெயரில் அத்துமீறி நடந்து கொள்வதை பார்க்கும் பெற்றோர்களின் மனது தங்கள் குழந்தைகளை நினைத்து பதைபதைக்கிறது. அதிலும் பிப்ரவரி 14 காதலர் தினம் என்ற பெயரில் காதலர்கள் பறக்கிறார்கள் பல்வேறு இடங்களுக்கு.. 

 

காதலின் அடையாளமாக தாஜ்மஹால் கட்டப்பட்டது. அது இன்று உலக சின்னமாக கம்பீரமாக நிற்கிறது. ஆனால் பல காதல் கொலையில் முடிகிறது.   ஆனால் புதுக்கோட்டையில் ஒருவர் தன் காதல் மனைவிக்காக ஒரு சிறிய கோயிலை கட்சி ஐந்தரை அடி உயரத்தில் சிலை வடித்து தினசரி வழிபட்டு வருவதுடன் பிறந்த நாளில் அன்னதானமும் வழங்கி வருகிறார்.

 

 புதுக்கோட்டை உசிலங்குளம் 2 ம் வீதி ஓய்வு தொலைதொடர்புத் துறை அதிகாரி சுப்பையா அவர் தான் தன் காதல் மனைவி சென்பகவள்ளிக்கு கோயில் கட்டி சிலை வடித்து வழிபாடு நடத்தி வருபவர். உண்மை காதலரான 83 வயது சுப்பையாவை சந்தித்தோம்..

 

se

 

என் அத்தை மகள் தான் செண்பகவள்ளி.  அத்தை மகளானாலும் எங்களுக்கும் காதல் வந்தது. வயல் வரப்புகளில் எங்கள் காதல் வளர்ந்தது. காதலியை பார்க்க ஏதாவது காரணம் சொல்லி அவர் வீட்டுக்கு போறதும் அடிக்கடி நடக்கும். இப்ப மாதிரி செல்போனா இருந்துச்சு அப்ப கடுதாசியில எழுதி தான் கொடுக்கனும். கவிதை எல்லாம் எழுத வராது.   அதனால் வார்த்தைகளில் தான் காதல் வளர்ந்தது. திருவிழா என்றால் அன்றைக்கு புது சட்டையில போய் நின்றால் சந்தோசமா இருக்கும். அரசல் புரசலாக இருவர் வீட்டிலும் தெரிய வந்துச்சு முதல்ல கொஞ்சம் எதிர்ப்பு தான். இருந்தாலும் கட்டிணா அவளத்தான் கட்டுவேன்னு நான் இருந்துட்டேன். எங்க பிடிவாதத்தை பார்த்து இரு வீட்டாரும் சம்மதம் சொல்லிட்டாங்க.  அதாவது என்னோட 21 வது வயசுல 4.4.1958 ல எங்கள் திருமணம் அனைவரின் ஆசிர்வாதத்தோட நல்லபடியா நடந்துச்சு. அந்த நேரம் அதாவது 1957 -ல் கொல்கத்தாவுல எனக்கு ஓவர்சீஸ் கம்யூனிகேசன் துறையில வேலை. காதலும், கல்யாணமும் என்னை அந்த வேலையை உதற வைத்துவிட்டது. ஒரு வருசம் வேலை செஞ்சுட்டு ஊருக்கு வந்து கல்யாணம் செஞ்சுட்டு தொலை தொடர்பு துறையில வேலையை தொடங்கிட்டேன். 

 

எங்களுக்குள்ள சின்னச் சின்ன பிரச்சனைகள் வந்தாலும் உடனே சமாதானம் ஆகிடுவோம். எங்கள் நல்வாழ்க்கையின் அடையாளமாக 10 குழந்தைகள் பிறந்து 2 குழந்தைகள் இறந்தது. மீதி 4 ஆணும், 4 பெண் குழந்தைகளும் உண்டு. அவர்களையும் நல்ல நிலையில வளர்த்து திருமணமும் செஞ்சு வச்சுட்டோம். இப்ப அவங்க எல்லாரும் பல்வேறு ஊர்களில்  குடும்பம் குழந்தைகளோட இருக்காங்க.
1993 ல் எனக்கு பணி நிறைவு. என்னுடைய சந்தோசமான வாழ்க்கையில் என் மனைவியின் பங்கு அதிகம். குழந்தைகள் வெளியூர்களில் வசிப்பதால நாங்க இருவரும் (காதலர்கள்) தான் வீட்ல இருந்தோம். 2006 ல என் காதல் மனைவி செண்பகத்துக்கு பாலாப்போன சிறுநீரக கோளாறு ஏற்பட்டு வைத்தியம் செஞ்சேன். ஆனா என்னை விட்டு போயிட்டா என் காதலி.. அவள் மறைவு என்னை வதைக்கிறது இப்பவும். 

 

ஒரு வீட்ல அவளுடன் வாழ்ந்துட்டு எப்படி தனிமையில வாழ்வது என்று நினைத்தேன். என் செண்பகம் எப்பவும் என்னுடன் இருக்கனும் என்று நினைத்தேன். காலையில அவ முகத்தில் தான் விழிக்கனும் என்ற என் எண்ணங்களுக்கு சிலை வடிக்கலாம் என்று தோன்றியது. அதனால சுவாமிமலைக்கு போய் ரூ. ஒரு லட்சம் கொடுத்து செண்பகத்தின் உயரமான 5.5. அடி உயரத்தில் சிலை வடிக்க சொல்லி வாங்கி வந்து சின்னதா ஒரு கோயிலை கட்சி அதுக்குள்ள சிலையை வச்சு தினமும் வழிபாடு நடத்தி வருகிறேன். காலை மாலை செண்பகத்தை பார்த்த பிறகு தான் என் மனம் அமைதியடையும். 
     நான் கட்டிய தாலியை அவள் இறந்த பிறகு அவிழ்த்து கொடுத்தார்கள். அந்த தாலியை மீண்டும் செண்பகம் (சிலை) கழுத்தில் கட்டினேன். ஒவ்வொரு நாளும் தீபம் காட்டி வழிபடுகிறேன். சிலையாக செண்பகம் நிற்பதால் நான் தனிமைபட்டவன் இல்லை என் காதலி என்னுடள் இருக்கிறாள் என்பதை உணர்கிறேன். அதனால் எனக்கு நிம்மதி கிடைக்கிறது. அந்த நிம்மதி என் இறுதி காலம் வரை இருந்தால் போதும். நான் இறக்கும் வரை செண்பகத்திற்கு தீபம் காட்டுவேன். செண்பகத்தின் ஒவ்வொரு பிறந்த நாளிலும் புத்தாடை அணிவிப்பேன். இறந்த நாளில் நானும் எங்கள் குழந்தைகளும் இணைந்து அன்னதானம் கொடுப்போம். அந்த நிம்மதியோடு வசிக்கிறேன். 


    என் காதலி செண்பகம் என்னோடு வாழ்கிறாள்.. எங்கள் காதல் வாழ்கிறது. இறப்பு உடலுக்கு தான் காதலுக்கு இல்லை என்கிறார் 83 வயது காதலன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள்.