Skip to main content

எல்லாவற்றுக்கும் லைகாதான் காரணம்..! ஷங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு..!

Published on 11/05/2021 | Edited on 11/05/2021

 

Leica is the reason for everything  director shankar


நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ படத்தின் தாமதத்துக்குத் தயாரிப்பு நிறுவனமான லைகாதான் காரணம் என குற்றம்சாட்டி, இயக்குநர் ஷங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார். நடிகர் கமல் நடிக்கும் ‘இந்தியன் 2’ திரைப்படத்தை முடிக்காமல், வேறு படங்களை இயக்க இயக்குநர் ஷங்கருக்கு தடை விதிக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

 

இந்த வழக்கில் இயக்குநர் ஷங்கர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பல உண்மை தகவல்களை மறைத்து லைகா நிறுவனம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார் இயக்குநர் ஷங்கர். முதலில் இந்தப் படத்தை தில்ராஜு என்பவர் தயாரிக்க முன் வந்ததாகவும், பின் அவரை சமாதானப்படுத்தி, படத்தை தயாரிக்க லைகா நிறுவனம் முன் வந்ததாக கூறியுள்ளார்.

 

கடந்த 2017 செப்டம்பரில் படத்துக்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டதாகவும், 2018 மே மாதம் முதல் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்ததாகவும் பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. படத்தை தயாரிக்க 270 கோடி ரூபாய் செலவாகும் என பட்ஜெட் போட்ட நிலையில், அதைக் குறைக்கும்படி லைகா நிறுவனம் கூறியதாகவும், அதை ஏற்று பட்ஜெட்டை 250 கோடியாக குறைத்தும், படப்பிடிப்பை துவங்குவதில் தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்தியதாகவும் லைகா மீது புகார் தெரிவித்துள்ளார்.

 

தில்ராஜு படத்தை தயாரித்திருந்தால் படம் ஏற்கனவே வெளியாகியிருக்கும் எனவும், அரங்குகள் அமைத்துத் தருவதில் தாமதம், நிதி ஒதுக்கீட்டில் தாமதம் போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தாமதமானதாகவும் பதில் மனுவில் கூறியுள்ளார். நடிகர் கமலுக்கு மேக் அப் அலர்ஜி ஏற்பட்டதாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும், அதற்கு தான் பொறுப்பல்ல என்றும் இயக்குநர் ஷங்கர் தனது பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளார்.

 

இதுதவிர படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது, கரோனா ஊரடங்கு போன்ற காரணங்களாலும் படப்பிடிப்பு தாமதமானதாகவும் கூறியுள்ளார். படத் தயாரிப்பு பணிகளில் ஏற்பட்ட நஷ்டத்துக்குத் தான் பொறுப்பல்ல எனவும், வரும் ஜூன் முதல் படப்பிடிப்பை மீண்டும் துவங்க தயாராக இருப்பதாக கூறியும், அதைக் கருத்தில் கொள்ளாமல் தனக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

 

2020 ஜூன் முதல் 2021 மே வரையிலான ஓராண்டு காலத்தை வீணடித்தது லைகா நிறுவனம்தான் எனவும், இந்தக் காலத்தில் தான் சும்மா இருக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். லைகா நிறுவனம் தாக்கல் செய்த இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் பதில் மனுவில் ஷங்கர் கோரியுள்ளார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தளபதியும் நாயகனும் - 21 வருடங்கள் கழித்து நடந்த சம்பவம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

rajini and kamal meets in same studio in chennai

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. அதே இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியும் கமலும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தையும் லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். 

 

முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளது. அதற்கான படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

Next Story

"எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்" - மக்களின் அழைப்பை ஏற்ற இந்தியன் தாத்தா

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

indian 2 An Intro glimpse released

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்தப் படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

 

இந்தியன் - 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.

 

இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில், "எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது" என கமல் பேசுகிறார். தொடர்ந்து உலகம் முழுவதும் ஊழல் நடப்பது போல் காட்டப்படுகிறது. அதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் வரும்படி அழைக்கின்றனர்.

 

மேலும் கம் பேக் இந்தியன் என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்குகின்றனர். இறுதியில் மக்களின் அழைப்பை ஏற்று கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து, "வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்" என பேசுகிறார். இந்த வீடியோ தற்போது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.