கைபேசியில் பேசியபடியே பேருந்தை இயக்கியதாக வந்த புகார்களின் பேரில், அரசுப்பேருந்து ஓட்டுநர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து கந்திக்குப்பம் நோக்கி கடந்த நவ. 19ம் தேதி, அரசு நகரப்பேருந்து சென்றது. அந்தப் பேருந்தை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ஓட்டுநர் சங்கர் ஓட்டிச்சென்றார்.

கந்திக்குப்பம் அருகே சென்றபோது, ஓட்டுநர் சங்கர் தனது கைபேசியில் பேசியபடியே பேருந்தை இயக்கினார். இதைப் பார்த்த போக்குவரத்து அதிகாரிகள், இதுகுறித்து சேலம் கோட்ட போக்குவரத்து உயரதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து ஓட்டுநர் சங்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அதேபோல், மேட்டூரில் இருந்து தர்மபுரிக்கு பேருந்து இயக்கிய ஓட்டுநர் ஜெய்சங்கர் என்பவரும் பணி நேரத்தில் கைபேசியில் பேசிக்கொண்டு அலட்சியமாக செயல்பட்டார். அதுகுறித்து புகாரின்பேரில் அவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.