Skip to main content

களிமண் உருவத்தை வைத்து பூஜை! சிறைத்துறை அதிகாரியை பழிவாங்க மாந்திரீகம் செய்த வார்டன்! 

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
u


ஊத்தங்கரை கிளைச்சிறையில் பணி நேரத்தை மாற்றியதால் ஆத்திரம் அடைந்த வார்டன், சிறைத்துறை அதிகாரியை பழி வாங்கும் நோக்கில் களிமண் உருவத்தை வைத்து மாந்திரீக பூஜை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் சேலம் மத்திய சிறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கிளைச்சிறை செயல்பட்டு வருகிறது. இங்கு 12 பேர் சிறை வார்டன்களாக பணியாற்றி வருகின்றனர். 20 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.


தற்போது சிறைகளில் வார்டன்கள் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் சுழற்சி முறையில் மூன்று மணி நேர ஷிப்ட் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த இரு நாள்களுக்கு முன்பிருந்து இந்த புதிய முறை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு வார்டன்கள் மத்தியில் கடும் அதிருப்தி கிளம்பி உள்ளது.


ஜனவரி 18ம் தேதியன்று அந்தக் கிளைச்சிறையின் கண்காணிப்பாளர் விஸ்வநாதன், பணி நேர மாறுதலை அதிகாரப்பூர்வமாக கொண்டு வந்தார். இதனால் சிறைக் கண்காணிப்பாளருக்கும் வார்டன் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த வார்டன், கண்காணிப்பாளருக்கு கடுமையாக சாபம் விடத் தொடங்கினார். 'பணியாளர்களை வதைப்பதில் உங்களுக்கு என்ன அப்படியொரு ஆனந்தம்? நீங்கள் கடவுளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். நீங்கள் நாசமாகப் போய்விடுவீர்கள்,' என்று சாபம் விட்டவர், அங்கிருந்து கோபமாக வெளியே சென்றார்.


பின்னர், சிறிது நேரத்தில் அந்த வார்டன், தேங்காய், வாழைப்பழம், பூ, எலுமிச்சை, களிமண்ணால் ஆன உருவம் ஆகியவற்றுடன் சிறைக்குள் வந்தார். சிறை வளாகத்தில் திடீரென்று அந்த களிமண் உருவத்தை வைத்து மாந்திரீகம் செய்வதுபோல் சில பூஜைகளை செய்தார். எனக்கு வேலை நேரத்தை மாற்றிக் கொடுத்தவர்களை கடவுள் தண்டிக்க வேண்டும் என வேண்டிக் கொண்டார். அங்கிருந்த காய்ந்த மரக்குச்சிகளை எடுத்து வந்து தீ மூட்டினார். அதில் சில துணிகளைப் போட்டு எரித்தார். 


இதனால் சிறைக்குள் பதற்றம் ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற வார்டன்களும், கைதிகளும் அந்த வார்டனை சமாதானப்படுத்தினர். ஆனால் யார் பேச்சையும் அவர் கேட்கவில்லை. 


இந்நிலையில், வெளியே சென்றிருந்த சிறைக்கண்காணிப்பாளர் விஸ்வநாதனும் உள்ளே வந்தார். அங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்த அவர், அந்த வார்டனை கண்டித்தார். அப்போதும் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற வார்டன்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.


இந்த சம்பவம் சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஊத்தங்களை கிளைச்சிறையில் நடந்த சம்பவம் குறித்து சேலம் மத்திய சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் இருசக்கர வாகனமும் மோதி விபத்து; 5 பேர் உயிரிழப்பு!

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
madurai thirumangalam nearest two wheeler car incident

மதுரையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சிவரக்கோட்டை என்ற பகுதியில்  திருமங்கலம் - விருதுநகர் நான்கு வழிச்சாலையில் காரும் இரு சக்கர வாகனமும் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் மதுரையில் உள்ள வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் தளவாய்புரத்தில் உள்ள கோவிலுக்கு ஆன்மிகப் பயணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பிய நிலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பலியானவர்களின் உடல்கள் திருமங்கலம் மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் படுகாயம் அடைந்த ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Attention Paytm Passtag users

அந்நிய முதலீடுகள் தொடர்பான விதிமுறைகளை பேடிஎம் பேமென்ட் வங்கி கடைப்பிடிக்கவில்லை எனத் தெரிவித்து பிப்ரவரி 29 ஆம் தேதி முதல் பேடிஎம் வங்கி வாடிக்கையாளர்களிடமிருந்து பணத்தைப் பெறுவதற்கு இந்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31 ஆம் தேதி தடை விதித்திருந்தது. அந்த உத்தரவில், வங்கிக் கணக்குகளில் புதிய தொகைகள் ஏதும் வரவு வைக்கக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம் கடன் பரிவர்த்தனைகள், பேடிஎம் கணக்குகளில் பணச் செலுத்துகை, முன்கூட்டிய பணச் செலுத்துகை உள்ளிட்ட வங்கி சேவைகளுக்காக மார்ச் 15 வரை இந்த சேவைகளைத் தொடர ரிசர்வ் வங்கி அனுமதித்திருந்தது.

மேலும் பேடிஎம் நிறுவனத்தின் மீது சட்ட விரோதப் பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் பேடிஎம் நிறுவனம் இறங்குமுகத்தை சந்தித்து வருகிறது. இதனையடுத்து பேடிஎம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக விஜய் சேகர் ஷர்மா அறிவித்திருந்தார்.

இந்நிலையில் மார்ச் 15 ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பாஸ்டேக் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணம் செலுத்த பேடிஎம் பாஸ்டேக் பயன்படுத்துவோர் நாளை மறுநாளுக்குள் (15.03.2024) வேறு  வங்கிக்கு மாற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.