
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு பேட்டிக் விமானம் இன்று புதன்கிழமை அதிகாலை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவினர் வழக்கமான சோதனைகளை மேற்கொண்டனர். இதில், ஆண் பயணியொருவர் அவரது உடலுக்குள் (அடிவயிற்றில்) 3 கேப்சூல் வடிவிலான உறைகளில் தங்கத்தை வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.
அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை மூலம் தங்கத்தை எடுத்தபோது, அதில் 1025 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 64.51 லட்சமாகும். அதேபோல திங்கள்கிழமை இரவு துபாயிலிருந்து வந்த விமானத்தில் பெண் பயணியொருவர், 772 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 48.60 லட்சமாகும். இது தொடர்பாக சுங்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து மொத்தம் ரூ.1.13 கோடி மதிப்பிலான 1797 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.