Skip to main content

அமைச்சர் பிறந்தநாள் கபடி போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறையினர்

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

kabaddi match conducted for udhayanidhi stalin birthday in cuddalore 

 

திமுக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்னிந்திய அளவிலான மாபெரும் கபடி போட்டி நெய்வேலியில் உள்ள கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்றது. கபடி போட்டியை கடந்த 19 ஆம் தேதி நெய்வேலி எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் துவக்கி வைத்தார்.

 

லீக் முறையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ், சென்னை சிட்டி போலிஸ், தமிழக வனத்துறை, தஞ்சாவூர், சேலம், புதுக்கோட்டை, மதுரை, கடலூர், கன்னியாகுமரி, விழுப்புரம்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கபடி வீரர்கள் பங்கேற்றனர்.

 

ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் தமிழ்நாடு போலீஸ் மற்றும் டெல்டா ஸ்டோர்ஸ் வடுவூர் அணிகள் மோதிய நிலையில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி பெற்றது. பெண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் சென்னை சிட்டி போலீஸ் அணியும் ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி அணியும் மோதிய நிலையில் சென்னை சிட்டி போலீஸ் அணி வெற்றி பெற்றது.

 

போட்டியில் வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் வழங்கினர்.

 

kabaddi match conducted for udhayanidhi stalin birthday in cuddalore 

 

இந்நிகழ்ச்சியில், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன், தி.மு.க நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்