
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகேயுள்ள காடாம்புலியூரை சேர்ந்தவர் செல்வம் (எ) செல்வமுருகன்(40). இவருக்கு பிரேமா என்ற மனைவியும், மதன்(26) என்ற மகனும், லீனா(12) என்ற மகளும் உள்ளனர். முந்திரி வியாபாரம் செய்து வந்த இவர்கள் தொழில் சம்பந்தமாக சொந்த ஊரான காடாம்புலியூரிலிருந்து நெய்வேலி இந்திராநகர் பகுதியில் வசித்துவந்தனர்.
இந்நிலையில் கடந்த 28.10.2020 அன்று நெய்வேலி பிளாக் எண் 26 - ல் காவியா என்ற பெண் அணிந்திருந்த செயினை பறித்ததாக செல்வமுருகன் மீது நெய்வேலி வடக்குத்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, கைது செய்யப்பட்டு 30.10.2020 அன்று விருத்தாசலம் கிளைச்சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து 02.11.2020 அன்று செல்வமுருகனுக்கு வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறி சிறைத்துறை அதிகாரிகள் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து, பின்பு மீண்டும் கிளைச் சிறைக்கு அழைத்துச் சென்றனர். மீண்டும் 04.11.2020 அன்று இரவு வலிப்பு ஏற்பட்டதாக கூறி செல்வமுருகன், அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அப்போது மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி பிரேமாவுக்கும், நெய்வேலி மற்றும் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் விரைந்துவந்த காவல்துறையினர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் ஆனந்திற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் குற்றவியல் நடுவர் ஆனந்த், வீடியோ ஆதாரத்துடன் செல்வமுருகன் மனைவி, மகன், மகள் மற்றும் அவரது உறவினர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டார். பின்னர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த செல்வமுருகன் உடலை உறவினர்கள் முன்னிலையில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின்னர் செல்வமுருகன் சடலம் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் செல்வமுருகன் மனைவி பிரேமா மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர சாகமூரி, காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீஅபிநவ் ஆகியோரிடம், 'தனது கணவர் இறப்பில் மர்மம் உள்ளதாகவும், காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் உயிரிழந்ததாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றும் புகார் மனு அளித்தார். அத்துடன் உறவினர்களுடன் 06.11.2020 அன்று சென்னை - கும்பகோணம் சாலையில் காடாம்புலியூரில் சாலை மறியலில் ஈடுபட்டார். அதையடுத்து அங்கு விரைந்து சென்ற டி.எஸ்.பி பாபு பிரசாந்த், வட்டாட்சியர் பிரகாஷ் மற்றும் போலீசார் சாலை மறியல் செய்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும் பிரேமா, கணவரை போலீசார் தான் அடித்து துன்புறுத்தி கொலை செய்துள்ளதாக சந்தேகப்படுகிறேன். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது குடும்பத்திற்கு அரசு வேலைவாய்ப்பு மற்றும் நிவாரணம் வழங்கவேண்டும்' என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினார். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலை அவர்கள் கைவிட்டனர்.

இதனிடையே 'காவல்துறையினர் துன்புறுத்தியதால்தான் செல்வமுருகன் உயிரிழந்ததாகவும், அவரது இறப்பிற்கு நீதி மற்றும் குடும்பத்திற்கு நிவாரணம் கிடைக்க வேண்டும்' என்றும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
அதேசமயம் விருத்தாசலம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஆனந்த், தொடர்ந்து விசாரணை செய்துவந்தார். அதேபோல் கடலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் 8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென மனித உரிமை ஆணைய புலன் விசாரணை பிரிவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மனித உரிமை ஆணையமும் விசாரணை செய்துவருகிறது. மேலும் செல்வமுருகன் மனைவி பிரேமா, கோரிக்கை வைத்ததன் பேரில் டி.ஐ.ஜி. திரிபாதி, சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிந்து செல்வமுருகன் குடும்பத்தினர், நெய்வேலி காவல் நிலையம் மற்றும் விருத்தாசலம் கிளைச் சிறையில் விசாரணை நடத்தினர்.
ஆனால், இன்ஸ்பெக்டர் அளவிலான புகாரை இன்ஸ்பெக்டர் அளவிலான சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் விசாரிக்கக்கூடாது என்று பிரேமா உயர் நீதிமன்றத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. வசம் மாற்றப்பட்டது. அதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்தும் விதமாக, சி.பி.சி.ஐ.டி. துணை காவல் கண்காணிப்பாளர் (DSP) குணவர்மன் 11.11.2020 முதல் விசாரணையை தொடங்கி நடத்திவருகிறார்.
இதனிடையே சிறை கைதி மரணத்தில், கைதியின் குடும்பத்தினரால் குற்றம் சாட்டப்பட்ட நெய்வேலி நகரிய காவல் நிலைய ஆய்வாளர் ஆறுமுகத்தை சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் தொய்வு ஏற்படாமல் இருப்பதற்காக கடந்த வாரம் அதிரடியாக கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார். அதேசமயம் தனது கணவர் சாவில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், மரணத்தை கொலை வழக்காக மாற்ற வேண்டும் எனவும் கூறி செல்வமுருகனின் மனைவி பிரேமா சடலத்தை இன்னும் வாங்கவில்லை.

இந்த நிலையில், உடலை மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரி செல்வமுருகனின் மனைவி பிரேமா தொடர்ந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ‘விருத்தாசலம் குற்றவியல் நீதிபதி, இதுகுறித்து முடிவெடுக்கலாம்’ என்று கூறி கடந்த 18-ஆம் தேதி வழக்கினை முடித்துவைத்தது.
அதையடுத்து பிரேமா, 'மறு உடற்கூறு ஆய்விற்கு உத்தரவு வழங்க கோரியும், மறு உடற்கூறாய்வினை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செய்ய வேண்டும் என்றும், ஆய்வின்போது மருத்துவ பேராசிரியர் ஒருவர், 2 மருத்துவர்கள், தான் மற்றும் தனது வழக்கறிஞர் என 5 நபர்கள் இருக்க உத்தரவு வழங்கக்கோரியும் நேற்று விருத்தாசலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த், 'ஜிப்மர் மருத்துவமனையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் மறு உடற்கூறாய்வு செய்வதற்கான வாய்மொழி உத்தரவு அளித்தார். இதனை தொடர்ந்து இன்று ஜிப்மர் மருத்துவமனையில் உடற்கூறாய்வு செய்யப்படும் என்று தெரிகிறது.