Skip to main content

'அரசியலில் வாய் வித்தை காட்டுவது நம் வேலை அன்று'-தொண்டர்களுக்கு விஜய் கடிதம்

Published on 20/10/2024 | Edited on 20/10/2024
nn

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் கட்சிக்கான முதல் மாநாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் 27ஆம் தேதி விக்கிரவாண்டியின் வி.சாலை பகுதியில் மாநாடு நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஜய் தற்பொழுது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இதற்கு முன்பாகவே மாநாடு குறித்து முதல் கடிதத்தை விஜய் வெளியிட்டு இருந்த நிலையில் தற்பொழுது இரண்டாவது கடிதமாக இதனை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில்,  'மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது. மாநாட்டு பணிகளுக்கான குழுக்களும், தொகுதி பொறுப்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நம் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கை திருவிழாவின் ஏற்பாடுகளில் நீங்கள் தீவிரமாக இருப்பது எனக்கு தெரியும். அரசியலை வெற்றி- தோல்விகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு அளவிடாமல், ஆழமான அக உணர்வாகவும் கொள்கை கொண்டாட்டமாகவும் அணுகப்போகும் நம்முடைய அந்தத் தருணங்கள் மாநாட்டில் மேலும் அழகுற அமையட்டும்.

அரசியல் களத்தில் வாய்மொழியில் வித்தை காட்டுவது நம் வேலை அன்று. நம்மைப் பொறுத்தவரை செயல் மொழிதான் நமது அரசியலுக்கான தாய்மொழி. மாநாட்டு களப்பணிகளில் மட்டுமல்லாமல் நம் ஒட்டுமொத்த அரசியல் களப்பணிகளும் நாம் அரசியல்மயப்படுத்தப்பட்டவர்கள் என்ற ஆழமான எண்ணத்தை மக்கள் மத்தியில் நீங்கள் உண்டாக்குவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

உற்சாகமும் உண்மையான உணர்வும் தவழும் உங்கள் முகங்களை மாநாட்டில் காணப்போகும் அந்தத் தருணங்களுக்காகவே என் மனம் தவம் செய்து காத்துக்கிடக்கிறது. இதை நீங்கள் அறிவீர்கள் என்று எனக்கு தெரியும். இந்த நெகிழ்வான நேரத்தில் முக்கியமான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணி பெண்கள், பள்ளி சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வர திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலை நான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காண வேண்டும் என்ற ஆவல் எனக்கும் இருக்கிறது.

ஆனால் எல்லாவற்றையும் விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம். மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணம் அவர்களுக்கு உடல் ரீதியாக சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். ஆதலால் அவர்கள் எவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டும் என்று அவர்களின் குடும்ப உறவாக இருக்கும் உரிமையில் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தங்கள் வீடுகளிலிருந்து நமது வெற்றிக் கொள்கை திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்று அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும் மாநாட்டுக்கு வந்து செல்லும் போது பாதுகாப்புடன் பயணிப்பது மிக முக்கியம். அதேபோல பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும் நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும் அதில் பொறுப்புணர்வுடன் கடமை கண்ணியம் கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும். அரசியலுக்கு அது பொருந்தும். நாம் எப்பொழுதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை எனும் விவேக சாலையில் சந்திப்போம்'  என தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்