திருச்சி பெரிய கடை வீதி வரதராஜ பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் வெங்கடேசன் (33). இவர், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. வெங்கடேசன் திருச்சியில் உள்ள ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.
வெங்கடேசன், ஒரு தனியார் நிதி நிறுவனம் சார்பில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி கார் வாங்கி உள்ளார். இதையடுத்து அந்த காருக்கான கடனைத் திருப்பி கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி வெங்கடேசனின் மனைவி வெளியூரில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
வழக்கம்போல், கணவர் வெங்கடேசனை அவரது மனைவி செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் வெங்கடேசன் செல்போனை எடுத்து பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி, தன்னுடைய கணவரின் நண்பரான கீர்த்திவாசன் என்பவருக்கு செல்போனில் பேசி விஷயத்தை கூறி வீட்டிற்குச் சென்று பார்க்குமாறு சொல்லியுள்ளார்.
இதையடுத்து கீர்த்திவாசன், வெங்கடேசன் வீட்டிற்குச் சென்று பார்த்தபொழுது அங்கு அறையில் வெங்கடேசன் மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர் கீர்த்திவாசன், உடனடியாக வெங்கடேசனின் மனைவிக்கும் அவரது குடும்பத்திற்கும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெங்கடேசனின் மனைவி வெளியூரிலிருந்து அவசரமாக ஊர் திரும்பினார்.
இதற்கிடையில் போலீசார், தூக்கில் பிணமாகத் தொங்கிய வெங்கடேசன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து வெங்கடேசன் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.