Skip to main content

“நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குவாரியை மீண்டும் இயக்க வேண்டும்” - மனு அளித்த லாரி உரிமையாளர்கள்!

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
"Stopped quarry must be reopened" - Truck owners who petitioned

 

திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இயங்கிவந்த அரசு மணல் குவாரிகள் அனைத்தும் கடந்த ஏப்ரல் மாதம்முதல் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல்வேறு வகையான கட்டுமானப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த தொழிலையே நம்பியிருக்கும் லாரி உரிமையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அதனால் அவர்களிடம் பணியாற்றும் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் ஆகியோரும் எந்தவித வருமானமுமின்றி அவதியுற்றுவருகின்றனர். வாங்கிய கடனைத் திரும்ப செலுத்த முடியாமல் சில லாரி ஓட்டுநர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இது தவிர மணல் குவாரிகள் மூலம் அரசுக்கு சுமார் 200 கோடி ரூபாய்வரை வருமானம் கிடைக்கும். தற்போது மணல் குவாரிகள் இயக்கப்படாமல் உள்ளதால் சில சமூக விரோதிகள் திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர்.

 

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் ஆகியோரின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், அரசு வருமானம் ஈட்டும் வகையிலும் இயக்கப்படாமல் உள்ள மணல் குவாரிகளை உடனடியாக மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் மாநில தலைவர் செல்ல. ராஜாமணி தலைமையில் அச்சமேளணத்தைச் சேர்ந்தவர்கள் திருச்சியில் உள்ள பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்