![Independent candidate arrested in money laundering case](http://image.nakkheeran.in/cdn/farfuture/viHKNhVqFdL3iWQGOq5_9hH9jE_nZbU6Yx_xwu1CzYA/1644574759/sites/default/files/inline-images/49_22.jpg)
அரியலூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் மீது பண மோசடி புகார் கொடுக்கப்பட்டதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டம், சாக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த மணிவேல், அ.தி.மு.க. சார்பில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முயன்றார். அவருக்கு சீட் வழங்காததால், சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த நிலையில், வீடு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் முறுக்கு கம்பிகளை அதே பகுதியைச் சேர்ந்த ஜாகீர் உசேன் என்பவரிடம் இருந்து மணிவேல் வாங்கியிருக்கிறார். இதற்கான 4.52 லட்சம் ரூபாய் பணத்தை மணிவேல் தராமல் இழுத்தடித்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஜாகீர் உசேன் காவல்நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சுயேட்சை வேட்பாளர் மணிவேலை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதனிடையே, அரியலூர் நகராட்சிக்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.