Skip to main content

விடுமுறை நாளில் ஆர்.டி.ஓ ஆஃபீஸ் லஞ்சத்தில் பிசியோ பிசி! - ரூ.25 லட்சம் ரொக்கமும் 117 பவுன் நகைகளும் விருதுநகரில் பறிமுதல்!

Published on 12/12/2020 | Edited on 12/12/2020

 

 

 

போக்குவரத்துத் துறை, காலம் காலமாக லஞ்சத்தில் திளைத்தபடியே உள்ளது. 24 வருடங்களுக்கு முன்பே, 'இந்தியன்' திரைப்படத்தில், இத்துறையில் மலிந்து கிடக்கும் லஞ்ச அதிகாரிகளைத் தோலுரித்திருந்தார் இயக்குநர் ஷங்கர். அதனாலெல்லாம், அதிகாரிகள் திருந்திவிடுவார்களா என்ன? சரி, விஷயத்துக்கு வருவோம்!

 

லஞ்சத்தை தவிர்ப்பதற்கு, இத்துறையில் ஆன்லைன் பணப் பரிவரித்தனை மேற்கொள்ளப்படுவதாகச் சொன்னாலும், புரோக்கர்கள் நடமாட்டமும், லஞ்சத் தொகை பரிமாற்றமும், வாடிக்கையாகிவிட்டது. இன்றைக்கு இரண்டாவது சனிக்கிழமை என்பதால், விருதுநகர் ஆர்.டி.ஓ. (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) ஆஃபீசுக்கும் இன்று அரசு விடுமுறைதான்! ஆனாலும், அந்த அலுவலகம் படு பிசியாக இருந்தது. புரோக்கர் அதுல் பிரசாத் என்பவர் மூலம், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வி, மதுரை மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த் ஆகியோர் பெற்ற லஞ்சப்பணம், அந்த அலுவலகத்தில் பெருவாரியாக உள்ளதென்று தகவல் கிடைத்தவுடன், விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறையினர், விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகம் விரைந்தனர்.  

 

காரில் இருந்தே நகைகளும், பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தகவல் அளித்துள்ளனர். அந்த வகையில், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் கலைச்செல்வியிடமிருந்து 117 சவரன் தங்க நகைகளும், ரொக்கம் ரூ.24,15,780-ம், மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்திடமிருந்து ரூ.1,43,250-ம், புரோக்கர் அதுல் பிரசாத்திடமிருந்து ரூ.7,850-ம் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

நகைகள் அனைத்தும், தனது சொந்த நகைகள் என்று கலைச்செல்வி கூறிவரும் நிலையில், அதற்கான ஆதாரத்தை அவரால் தரமுடியவில்லையாம். மதுரை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் சண்முக ஆனந்த், விடுமுறை நாளில் விருதுநகர் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு எதற்காக வந்தார் என்பதற்கும், அத்துறையினரிடம் பதில் இல்லை.

 

வருடத்தின் கடைசி மாதம் என்பதால், லஞ்சத் தொகையைப் பிரிப்பது குறித்த  ‘டிஸ்கஷன்’ நடந்திருக்கலாம் என்றும், ‘போக்குவரத்துத்துறை அமைச்சகம் வரைக்கும் மாமூல் போய்க்கொண்டுதான் இருக்கிறது’ எனவும், தகவலைக் கசியவிடுகிறது போக்குவரத்துத்துறை வட்டாரம். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ஒரே குடும்பத்தில் 90 பேர்'-வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்த சம்பவம்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'90 people in the same family'-incident of carting and coming to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் விருதுநகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90 பேர் வண்டி கட்டிக் கொண்டு சென்று வாக்களித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பூசாரி நாயக்கன்பட்டி ஊரில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 90க்கு மேற்பட்டோர் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டுடன் வண்டி கட்டிக்கொண்டு வாக்களிக்க வந்தனர். விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் 100 பேர் கொண்ட கூட்டுக் குடும்பத்தினர் வாக்களித்தனர்.

Next Story

விருதுநகர் தொகுதி; ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் மக்கள் (படங்கள்)!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024

 

விருதுநகர் கூரைக்குண்டு, அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில்,விருதுநகர்  மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் இ.ஆ.ப.,  தனது வாக்கினைப்  பதிவு செய்தார்.

மல்லங்கிணர் அரசுத் தொடக்கப்பள்ளியில் அமைச்சர் தங்கம் தென்னரசு,தனது குடும்பத்தினருடன் வந்து வாக்களித்தார். திருப்பரங்குன்றம் – திருநகரிலுள்ள சீதாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் வாக்களித்தார். திருத்தங்கல் கே.எம்.கே.ஏ.பள்ளியில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வாக்களித்தார்.

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதியில் மொத்தம் 15,01,942 வாக்காளர்கள் உள்ளனர். மொத்தம் 1689 மையங்களில் வாக்காளர்கள் வாக்களித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்பாடு செய்யப்பட்ட சக்கர நாற்காலிகளில் மாற்றுத்திறனாளிகளும் முதியோரும் வாக்களித்துள்ளனர்.  இந்தத் தேர்தலில் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள முதல் முறை, இளம் தலைமுறை வாக்காளர்கள்,  மூத்த வாக்காளர்கள், திருநங்கைகள், பெண்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் என அனைத்துத் தரப்பு வாக்காளர்களும் வாக்களித்து, தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். 

விருதுநகர் பாராளுமன்றத் தொகுதி  வாக்குப் பதிவு  மதியம் 1.00 மணி நிலவரப்படி விருதுநகர்- 40.19%, திருப்பரங்குன்றம் - 39.33%, திருமங்கலம் - 41.70%, சாத்தூர் - 44.32%, சிவகாசி- 36.14%, அருப்புக்கோட்டை - 41.31%, என மொத்தம் - 40.45% வாக்குகள் பதிவாகியுள்ளது.