Skip to main content

விருத்தாசலம் அருகே மதுபோதையில் முதியவரை தாக்கி தள்ளிவிட்டு கொலை! போலீசார் விசாரணை!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள தே.பவழங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் தாமரைச்செல்வன்(60). இவருக்கும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஜெயராமன் மகன் கனகராஜ்(40) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் தாமரைச்செல்வனிடம்,  கனகராஜ் மனைவி அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் வெளியில் சென்றுவிட்டு வரும் கனகராஜ் இடம் எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது,  நீ ஏன் இதை கேட்க மறுக்கிறாய் என கேட்டு அவரிடம் நேற்று முறையிட்டுள்ளார். 

 

incident in viruthachalam

 

இதனால் ஆத்திரமடைந்த கனகராஜ் நேற்றிரவு மது போதையில் வந்து தாமரைச்செல்வனிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் சேர்ந்து தாமரைச்செல்வனை திட்டி, தாக்கியதோடு அவரை கீழே தள்ளியுள்ளனர். இதில் கீழே விழுந்த தாமரைச்செல்வன் தலையில் பலத்த அடிபட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் கருவேப்பிலங்குறிச்சி காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற கருவேப்பிலங்குறிச்சி போலீசார் உயிரிழந்த தாமரைச்செல்வனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தாமரைச் செல்வனை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர். 

 

சார்ந்த செய்திகள்