
கிருஷ்ணகிரி அருகே விஷவாயு தாக்கி இரண்டுபேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கட்டிக்கானபள்ளி என்ற இடத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்திற்கு எதிரே கட்டப்பட்டு வந்த ஒரு புதிய கட்டடத்தில் குடிநீர் தேவைக்காக தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டு வந்தது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக 20 அடி ஆழத்தில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. தொட்டியில் மிச்சம் இருந்த சென்ட்ரிங் வேலைகளை முடிக்க பெரியசாமி, முருகன் என்ற இரண்டு கட்டடத் தொழிலாளர்கள் இன்று (28.01.2021) காலை தொட்டியில் இறங்கியுள்ளனர். அப்போது மூச்சுத் திணறி இருவரும் தொட்டியின் உள்ளே விழுந்துள்ளனர்.

இதை மேலே இருந்து பார்த்துக்கொண்டிருந்த மற்றொரு கட்டடத் தொழிலாளி அவர்களைக் காப்பாற்ற முயன்ற நிலையில், அவரும் தொட்டிக்குள் விழுந்தார். இதனைக் கண்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் அவர்களை மீட்டனர். மூன்று பேரில் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.