Skip to main content

புரியாத ஆன்லைன் வகுப்பு... – மாணவர் தற்கொலை!

Published on 20/01/2021 | Edited on 20/01/2021
incident in erode... police investigation

 

மாணவர்களின் மனநிலைக்கு ஆன்லைன் வகுப்பு எதிரானது என்பதையே இந்த பரிதாபகரமான சம்பவம் உறுதிபடுத்தியுள்ளது.

ஈரோடு, குமலன்குட்டை பகுதி, கணபதி நகரைச் சேர்ந்தவர் தம்பி. இவரது 17 வயது மகன் சக்திதருண். தந்தையான தம்பி நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சக்திதருண் ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து வந்தார். கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் 18-ந் தேதி தம்பியும், அவரது மனைவியும் வெளியே சென்றுவிட்டனர். சக்திதருண் மட்டும் வீட்டில் இருந்து ஆன்லைனில் வகுப்பில் பங்கேற்றார்.

 

அன்று மாலை சக்திதருண் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்தனர்.வீட்டின் கதவை தட்டினர். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. பின்னர் மாடிக்கு சென்றனர் அங்குள்ள ஒரு அறையில் சக்திதருண் தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு கடும் அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சக்திதருண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

 

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சக்திதருண் ஆன்லைன் வகுப்பு தனக்கு புரியவில்லை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இந்நிலையில் 12- ம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்பு மூலம் படித்ததும், அந்த பள்ளி நிர்வாகம் கொடுத்த படிப்பு வேலைகள் முழுமையாக முடிக்காததால் மன உளைச்சலில் இருந்த சசிதருண் விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்துள்ளார். இவரது தற்கொலைக்கு வேறுஏதாவது காரணம் இருக்குமோ என குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.  பிளஸ்- 2  மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்துவிட்டது. இந்நிலையில் சக்திதருண் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்