Skip to main content

சென்னையில் சட்டவிரோத கட்டுமானங்கள்: அடையாளம் காண ஆறுமாத அவகாசம் கேட்கும் மாநகராட்சி!

Published on 06/02/2021 | Edited on 06/02/2021

 

 constructions in Chennai: Corporation asks for six months to identify!

 

சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை அடையாளம் காண, ஆறு மாதம் கால அவகாசம் வேண்டும் என சென்னை மாநகராட்சி சார்பில்,  உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

சென்னை மாநகராட்சியின் ஐந்தாவது மண்டலத்தில் உள்ள 5,574 சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ருக்மாங்கதன் மனு தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், ஐந்தாவது மண்டலமான ராயபுரத்தைப் போல, பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியது. 

 

இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், ஐந்தாவது மண்டலத்தில் 5,523 விதிமீறல் கட்டுமானங்கள் அடையாளம் காணப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிக்கை தாக்கல் செய்தார். மேலும், அனைத்து மண்டலங்களிலும் சட்டவிரோத கட்டுமானங்களை அடையாளம் கண்டு, அறிக்கை தாக்கல் செய்ய ஆறுமாத கால அவகாசம் வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

இதை ஏற்று, வழக்கு விசாரணையை ஜூன் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், ஐந்தாவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து அடுத்தகட்ட அறிக்கையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

 

சார்ந்த செய்திகள்