Skip to main content

''நிதியை கேட்டால் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க சொல்வதா?"-அன்பில் மகேஷ் பேட்டி

Published on 28/08/2024 | Edited on 28/08/2024
nn

திருச்சியில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், ''தமிழக முதல்வர் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்று உள்ளார். அப்பொழுது அவரை வாழ்த்திய அனுப்புவதற்காக வந்த பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வியே மத்திய அரசு கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு அனுப்பாதது குறித்த கேள்வி தான். இந்த கேள்விக்கான விடை அளித்துவிட்டு தான் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார்.

கல்விக்கான 573 கோடி ரூபாய் ஜூன் மாதத்துடைய பணத்தை இன்னும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அதனால் தான் ஒரு மாதத்திற்கு முன்பாக தமிழக முதல்வர் அறிவுறுத்தலை ஏற்று நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் திருச்சி எம்.பி துரை வைகோ உள்ளிட்ட தோழமைக் கட்சிகளை சார்ந்த ஒவ்வொருவரும் தலைவர்களை அழைத்துக் கொண்டு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியையும், கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானையும் நாம் சந்தித்து கோரிக்கை வைத்தோம்.

கல்வி என்று வருகின்ற பொழுது வரவேண்டிய, கொடுக்க வேண்டிய நிதி நீங்கள் நிறுத்தி விடக்கூடாது. பல லட்சம் பிள்ளைகளுடைய கல்வி சார்ந்த விஷயம். இதில் அரசியல் செய்யக்கூடாது என்று நேரடியாகவே வலியுறுத்தி இருந்தோம். அவர்களும் பார்க்கிறோம். சொல்கிறோம் என்று சொன்னார்கள். அதன் பிறகு அதுபற்றி எதுவுமே சொல்லவில்லை, செய்யவில்லை. இருந்தாலும் துறை சார்பாக பல்வேறு முறை கடிதங்கள் எழுதி இருக்கிறோம். அதற்கும் உரிய பதில்கள் வரவில்லை.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் நாடாளுமன்றத்தில் பேசும் பொழுது இது சம்பந்தமாகவும் பேசி இருக்கிறார்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் தருவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இருந்தோம். ஆனால் கூட்டுத்தொடர் முடிந்து இத்தனை நாட்கள் கழித்தும் நிதி வரவில்லை. கல்வி என வரும் பொழுது அதற்கான நிதியை நிறுத்தி விடக்கூடாது, அதை உடனடியாக ஒதுக்கிட வேண்டும். 573 கோடி மட்டுமல்ல கடந்த ஆண்டு நமக்கு வர வேண்டிய கடைசி தவணையாக 249 கோடியை அவர்கள் நிறுத்திவிட்டார்கள். நீங்கள் தேசிய கொள்கைக்கு வாருங்கள் வந்தால் தான் தருவேன் என்று சொல்கிறார்கள். இன்னைக்கு ஏதோ காரணத்தைச் சொல்லி தேசிய கொள்கையில் வந்தால் தான் தருவேன் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்'' என்றார்.

சார்ந்த செய்திகள்