Skip to main content

திருமணத்திற்கு மீறிய உறவில் கணவன்; விரக்தியில் நான்கு வயது குழந்தையுடன் அரளி விதை சாப்பிட்ட மனைவி..!

Published on 24/05/2021 | Edited on 24/05/2021
Husband who had an extramarital affair; Wife eats arali seeds in despair

 

கடலூர் மாவட்டம் ராமநத்தம் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன் (35 வயது). இவரது மனைவி முத்துலட்சுமி (25). ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் இரு குடும்பத்துப் பெரியவர்களும் முறைப்படி பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்துள்ளன. இவர்களுக்கு தற்போது நான்கு வயதில் நித்லேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், ராஜன் அதே பகுதியில் உள்ள வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருப்பதாக அவரது மனைவி முத்துலட்சுமிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாகக் கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

 

இரு குடும்பத்துப் பெரியோர்களும் அவ்வப்போது கணவன் மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி வைத்துள்ளனர். இப்படி இருவரும் குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இருந்தும் ராஜன் தனது முறையற்ற நட்பைக் கைவிடாததால் கோபமடைந்த முத்துலட்சுமி, அவ்வப்போது கணவரிடம் கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்று விடுவாராம். இந்த நிலையில் இரண்டு மாதத்துக்கு முன்பு முத்துலட்சுமியை அவரது கணவர் ராஜன் அவரது தாய் வீட்டிற்குச் சென்று சமாதானப்படுத்தி தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான முத்துலட்சுமி அரளி விதையை அரைத்து, அதை அவர் சாப்பிட்டதோடு, நான்கு வயது மகன் நித்திலேஷூக்கும் கொடுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

 

அரளி விதையைச் சாப்பிட்ட முத்துலட்சுமி உயிர் பயம் ஏற்பட்டதும், தனது சகோதரர் சண்முகத்திற்கு செல்போன் மூலம் பேசி, நானும் எனது மகனும் அரளிவிதை அரைத்துச் சாப்பிட்டு விட்டோம்; நான் இறந்தாலும் பரவாயில்லை என் மகனை வந்து காப்பாற்று; எனக் கூறி கதறி அழுதுள்ளார். இதையடுத்து அவரது சகோதரர் சண்முகம் மற்றும் குடும்பத்தினருடன் கதறியடித்துக்கொண்டு ராமநத்தம் சென்றுள்ளனர். வீட்டில் மயக்க நிலையில் முத்துலட்சுமியையும் அவரது மகனும் இருந்துள்ளனர். இருவரையும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்குச் சேர்த்தனர். முத்துலட்சுமியைப் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அவரது 4 வயது மகன் நித்திலேஷ் மிகவும் ஆபத்தான நிலையில் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளார். 

 

இதுகுறித்து முத்துலட்சுமியின் தந்தை முருகேசன், ராமநத்தம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், "எனது மகள் இறப்பிற்கு அவரது கணவர் ராஜன் தான் காரணம்" என்று குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து ராமநத்தம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராஜாவைக் கைது செய்தனர். திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் முத்துலட்சுமி இறந்துள்ளதால் விருத்தாசலம் சார் ஆட்சியர் மற்றும் திட்டக்குடி டிஎஸ்பி ஆகியோர் நேரடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்