Skip to main content

புகழேந்தி தொடர்ந்த வழக்கில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் நேரில் ஆஜராக விலக்களித்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

High Court orders dismissal of OPS and EPS appearing in person in Pugazhendi case

 

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செய்தி தொடர்பாளர்  பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு,  அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக-வின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியை கட்சியிலிருந்து நீக்கியதாக,  ஜூன் 14ஆம் தேதி ஒருங்கிணைப்பாளர்  ஓ.பன்னீர்ச்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர். இது சம்பந்தமான அறிக்கையில்,  இது தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும்  வகையில் இருப்பதால் ஒ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை  அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக் கோரி புகழேந்தி, சென்னை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த வழக்கில் நாளை நேரில் ஆஜராக ஒ. பி.எஸ் - இ.பி.எஸ் க்கு  சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்குத் தடை கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே தாக்கல் செய்த வழக்கு இன்று நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், நிர்வாகிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற ஏராளமான புகார்களின் அடிப்படையிலும், புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்கியதாகவும், அதற்குக்  கட்சி விதிகளின்படி, ஒருங்கிணைப்பாளருக்கும், இணை ஒருங்கிணைப்பாளருக்கும் அதிகாரம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

 

தவறு செய்த ஒரு ஊழியரை நீக்கியதற்காக ஒரு தனியார் நிறுவனம் மீது அவதூறு வழக்கு தொடர முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், அப்படி யாராவது அவதூறு வழக்கு தொடர முடியுமென்றால் ஆயிரக்கணக்கான அவதூறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில்  இருக்கும் எனத் தெரிவித்தார். கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒருவர் நீக்கப்பட்டது குறித்துத் தெரிவிக்க வேண்டியது கடமை என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிடப்பட்டதாகத் தெரிவித்த அவர்,  இதில் அவதூறுக்கு என்ன முகாந்திரம் உள்ளதெனக் கேள்வி எழுப்பினார்

 

கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் ஏ. நடராஜன், புகாரில் அவதூறுக்கான எந்த சாரம்சமும் இல்லை எனவும், கட்சியின் விதிகளைப் பின்பற்றாத உறுப்பினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கட்சியில் இருந்து நீக்கவும் தலைமைக்கு முழு அதிகாரம் உள்ளதெனத் தெரிவித்திருந்தார். கட்சியில் இருக்கும் ஒருவரைப் புகாரின் அடிப்படையில் கட்சியை விட்டு நீக்கினால் அது அவதூறாகுமா எனக் கேள்வி எழுப்பியிருந்த அவர், புகழேந்தியைக் கட்சியில் இருந்து நீக்குவது முதல் முறையல்ல எனவும்,  கடந்த 2017 ல் ஏற்கனவே ஒரு முறை கட்சியில் இருந்து நீக்கிய போதும் இதே போன்ற வாரத்தைகளைப் பயன்படுத்தி தான் அறிக்கை வெளியிடப்பட்டதாகவும், எந்த கட்சியும் ஒருவரை நீக்கினால் இதே போன்ற வார்த்தையைத் தான் பயன்படுத்தும் எனவும்  தெரிவித்திருந்தார்

 

இன்று புகழேந்தி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ஜி.ஆர் பிரசாத், தன்னிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை எனவும், பதில் அளிக்க வாய்ப்பு வழங்கப்படாமல், காரணமின்றி நீக்கம் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒ.பி.எஸ் - இ.பி. எஸ் வெளியிட்ட அறிக்கையில், விடுவிப்பு என்ற வார்த்தையைப் பயன்படுத்தாமல், நீக்கம் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளதாகவும், இதில் அவதூறு வழக்குக்கு முகாந்திரம் உள்ளதாகவும் எடுத்துரைத்தார். இந்த அறிவிப்பால் தனது மானம், மரியாதை, கவுரவம் போய்விட்டதாகவும், சொந்த கட்சிக்காரர், மாற்றுக் கட்சியினர், உறவினர்கள் என யாரும் தன்னை மதிப்பதில்லை எனவும், தன்னை அசிங்கப் படுத்தியுள்ளதாகவும், தவறு செய்து விட்டீர்களா என மற்றவர் கேள்வி கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும், இதில்  அவதூறு உள்ளதா இல்லையா என்பதை கீழமை நீதிமன்ற விசாரணையில் தான் முடிவெடுக்க முடியும் எனச் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களைத் தொடர்ந்து, வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நீதிபதி, அதுவரை சிறப்பு நீதிமன்ற விசாரணைக்கு நேரில் ஆஜராக ஒ.பி.எஸ் - இ.பி.எஸ்.- க்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.