Skip to main content

கை, கால், உடல் வலி.... நூதன முறையில் ஏமாற்றி நகையை பறித்த மர்ம ஆசாமி!

Published on 09/08/2021 | Edited on 09/08/2021

 

Hand, foot, body pain .... Mysterious person who cheated in a modern way and stole the necklace

 

கள்ளக்குறிச்சி நகரை ஒட்டி உள்ளது காந்தி ரோடு மேட்டுத் தெரு. இப்பகுதியில் வசிப்பவர் பெரியவர் சீதாபதி. இவரது மனைவி 65 வயது ராஜலட்சுமி. இவர் வீட்டில் தனியாக இருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், கடந்த 20ஆம் தேதி பட்டப்பகல் நேரத்தில் ராஜலட்சுமியின் வீட்டுக்குச் சென்றார். அந்த நபர் அவரது கணவர் சீதாபதி அனுப்பிவைத்ததாக கூறியுள்ளார். அதை நம்பி அவரை வீட்டுக்குள் அழைத்துள்ளார் ராஜலட்சுமி. அப்போது அந்த மர்ம நபர், உங்கள் உடலில் கை, கால், வலி இருப்பதாகவும் அதைக் குணப்படுத்துவதற்குப் பூஜை செய்ய வேண்டும் என்றும் உங்கள் கணவர் கூறி என்னை இங்கு அனுப்பிவைத்துள்ளார்.

 

அதனால் பூஜை செய்யுமாறு உங்களை கணவர் சீதாபதி கூறியதாக இந்த மர்ம நபர் கூறியுள்ளார். அதனை உண்மை என்று நம்பிய ராஜலட்சுமி, வீட்டுக்குள் அழைத்துச் சென்று பூஜை பொருட்கள் தயார் செய்யுமாறு கூறியுள்ளார். அப்போது பூஜைக்கான ஏற்பாடுகள் தயாராகிக்கொண்டிருந்தபோது, ராஜலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பூஜையில் வைக்க வேண்டும் என்ற அந்த மர்ம நபர், 11 பவுன் நகையை அபகரித்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாக மறைந்து சென்றுவிட்டார். தான் ஏமாற்றப்பட்டது குறித்து அதிர்ச்சியடைந்த ராஜலட்சுமி, பின்னர் இதுகுறித்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

அவரது புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்த கள்ளக்குறிச்சி போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி நகரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டைமேடு பகுதியில் வாகனத் தணிக்கையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக பைக்கில் வந்த ஒரு நபரை சந்தேகத்தின் பேரில் மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அதில், அவர் ஆம்பூரைச் சேர்ந்த சோட்டா சாயபு மகன் ஃபாரூக் என்றும் கள்ளக்குறிச்சி வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்த ராஜலட்சுமியிடம் மந்திர பூஜை போடுவதாகக் கூறி நகையைத் திருடிச் சென்றதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

 

ஃபாரூக்கிடமிருந்து நகையைப் பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர். மேலும் ஃபாரூக் மீது குடியாத்தம் காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. வயதான மூதாட்டியிடம் பூஜை போடுவதாகக் கூறி நகை பறித்த மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மதுபோதையில் பேருந்தின் கண்ணாடி உடைப்பு; போலீசார் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Bus window breaking in drunkenness; Police investigation

உளுந்தூர்பேட்டை அருகே மது போதையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இரண்டு இளைஞர்கள் உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஒலையனூர், குணமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உளுந்தூர்பேட்டை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது வாகனத்தில் யார் முந்தி செல்வது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது. மது போதையில் இருந்த இரண்டு இளைஞர்களும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சென்றனர். அப்போது அவர்கள் இருவரும் ஒலையனூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, போதை ஆசாமி இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியுள்ளது. இதனால் இளைஞர்கள் இருவரும் மோதிக்கொண்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த எஸ்சிடிசி பேருந்தை தடுத்து நிறுத்திவிட்டு மோதலில் ஈடுபட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பேருந்து ஓட்டுனர் அந்தப் பேருந்தை அங்கிருந்து எடுத்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே அந்தப் போதை ஆசாமிகள் இருவரும் அங்கிருந்த கற்களை எடுத்து பேருந்தின் முன் கண்ணாடியை உடைத்தனர். மேலும் அவர்களுக்குள் சரமாரியாக தாக்கி கொண்டனர். இதில் மூன்று இளைஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 40க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி வந்த அந்தப் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்டதால் பேருந்து அங்கேயே நிறுத்தப்பட்டது.

இது தொடர்பாக குணமங்கலம், ஒலையனூர் பகுதிகளில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சாலையில் சென்ற பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'முந்தியது எந்த மாவட்டம்?'- தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Which district was the first?'- the information released by the Chief Electoral Officer

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று தற்போது முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் இறுதி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மாநில தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு பேசுகையில், ''தமிழகத்தில் ஏழு மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. வாக்குப் பெட்டிகளுக்கு சீல் வைத்து வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துச் செல்லும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. மத்திய சென்னையில் 67.37 சதவீதம், தென்சென்னையில் 67.82 சதவீதம், வட சென்னையில் 69.26 சதவீதம், தர்மபுரி மக்களவைத் தொகுதியில் 75.44 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. சில வாக்குச்சாவடிகளில் டோக்கன்கள் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மாலை 3 மணிக்கு மேல் ஏராளமான மக்கள் அதிக அளவில் தங்கள் வாக்குகளை செலுத்தியுள்ளனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் சட்ட ஒழுங்கு பிரச்சினை இன்றி அமைதியான முறையில் நடந்துள்ளது'' என்றார்.

திருவள்ளூர்-71.87 சதவீதம், வடசென்னை-69.26 சதவீதம், தென் சென்னை-67.82 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-69.79 சதவீதம், காஞ்சிபுரம்-72.99 சதவீதம், அரக்கோணம்-73.92 சதவீதம், வேலூர்-73.04 சதவீதம், கிருஷ்ணகிரி-72.96 சதவீதம், தர்மபுரி-75.44 சதவீதம், திருவண்ணாமலை-73. 35 சதவீதம், ஆரணி-73.77 சதவீதம், விழுப்புரம்-73.49 சதவீதம், சேலம்-73.55 சதவீதம், நாமக்கல்74.29 சதவீதம், ஈரோடு-71.42 சதவீதம், திருப்பூர் -72.02 சதவீதம், நீலகிரி-71.07 சதவீதம், கோவை-71.17 சதவீதம் வாக்குகள் பதிவாகியள்ளது.